பதிவு செய்த நாள்
12 செப்2016
00:37
ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி, ஆண்டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்கையை இலவசமாக வழங்க வேண்டும் எனும் நடைமுறை, அடுத்த ஆண்டு துவக்கம் முதல் அமலுக்கு வர உள்ளது.
கிரெடிட் அறிக்கை என்பது, தனிநபர்கள் நிதி வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் தகுதியை தீர்மானிக்க உதவும் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட விபரங்களை இந்த அறிக்கை கொண்டிருக்கும். வீட்டுக்கடன் போன்றவற்றை வழங்கும் முன், வங்கிகள் பரிசீலிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இது இருக்கிறது. ‘கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்’ என, குறிப்பிடப்படும் இந்த அறிக்கையை, வாடிக்கையாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு ஒரு கிரெடிட் அறிக்கையை இலவசமாக பெற முடிவது மிகவும் பயனளிக்கும் என கருதப்படுகிறது.
கிரெடிட் அறிக்கை கிரெடிட் ஏஜன்சி என குறிப்பிடப்படும் அமைப்புகளால், ஒருவரின் கடன் வரலாறு தொடர்பான தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையே, ‘கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்’ என குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது ‘சிபில், எக்ஸ்பீரியன், ஈக்யூபேக்ஸ், கிரிப் ஹை மார்க்’ ஆகிய நான்கு அமைப்புகள் இந்த கிரெடிட் அறிக்கையை வழங்கி வருகின்றன. வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகள், கடன் வழங்கும் முன், கடன் தகுதியை தீர்மானிக்க பல விஷயங்களை கவனத்தில் கொள்கின்றன. கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர், இதுவரை பெற்ற கடன்களை முறையாக செலுத்தியிருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக கிரெடிட் அமைப்புகளிடம் கிரெடிட் அறிக்கையை கோருகின்றன. மாதத்தவணை செலுத்தப்பட்ட விதம், நிலுவையில் ஏதேனும் தொகை உள்ளதா போன்ற விபரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். கடன் அனுமதி வழங்கப்படுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
கடன் வரலாறு அடைப்படையிலான கிரெடிட் ஸ்கோர் இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாகும். 300 முதல் 900 வரை மதிப்பெண்களை கொண்டதாக இது அமைகிறது. பொதுவாக கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருந்தால் கடன் எளிதாக கிடைக்கும். மேலும், வட்டி விகிதமும் குறைவாக அமைய வாய்ப்புள்ளது. வழக்கமாக, 750க்கும் அதிக மதிப்பெண் கொண்டவர்கள் எளிதாக கடன் பெற முடிவதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியே அறிக்கை வழங்குகின்றன.
கடன் தகுதிவீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கிரெடிட் ஸ்கோர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும் வகையிலான நிதி பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.கிரெடிட் அறிக்கையை பொது மக்களும் அணுக முடியும். கிரெடிட் அமைப்புகளிடம் இருந்து அறிக்கையை கட்டணம் செலுத்தி பெற வேண்டும். 400 முதல் 550 ரூபாய் வரை கட்டணமாக அமைகிறது. இதற்காக பான் கார்டு, இ–மெயில் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையை மேலும் எளிதாக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, கிரெடிட் அமைப்புகள் ஆண்டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்கையை இலவசமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கிரெடிட் அறிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த வசதி அளிக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இது அமலுக்கு வருகிறது. இதன் படி, மின்னணு வடிவில் கிரெடிட் அறிக்கையை வழங்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்க வேண்டும். கடன் தகுதி தொடர்பான அண்மை கால தகவல்களை கொண்டதாக இது அமைந்திருக்கும். இந்த அறிக்கையில் ஏதேனும் தகவல் பிழை இருப்பதாக கருதினால் அதை சரி செய்யும் வாய்ப்பும் வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பெறுவது எப்படி?கிரெடிட் அறிக்கையை பெறும் நடைமுறை பற்றிய விரிவான குறிப்புகளை கிரெடிட் அமைப்புகள் தங்கள் இணையதளங்களில் குறிப்பிட வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கிரெடிட் அறிக்கையில், குறைந்தது, கடந்த 36 மாதங்களுக்கான மாதத்தவணை விபரங்கள், கடன் பெற்ற வங்கிகள், கடன் வகை, மீதமுள்ள தொகை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். கிரெடிட் அறிக்கையை கோரி பார்வையிட்ட வங்கிகள் பற்றிய தகவலும் இடம்பெற்றிருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|