பதிவு செய்த நாள்
17 செப்2016
07:11
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்டில், 0.3 சதவீதம் சரிவடைந்து, 2,151 கோடி டாலராக குறைந்துள்ளது. இரண்டாவது மாதமாக, ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இதே மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் குறைந்து உள்ளது.
இதுகுறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: சர்வதேச மந்த நிலையால், ஏற்றுமதி வளர்ச்சி, 2014 டிசம்பர் முதல், இந்தாண்டு மே வரை குறைந்து வந்தது. ஜூன் மாதம், ஏற்றுமதி உயர்ந்த போதிலும், ஜூலையில் மீண்டும் சரிவடைந்தது. இந்நிலையில், ஆகஸ்டில், ஏற்றுமதி, 0.3 சதவீதம் குறைந்து, 2,151 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. தோல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி குறைந்ததால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2015 ஆகஸ்டில், ஏற்றுமதி, 2,158 கோடி டாலராக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் இறக்குமதியும், 14 சதவீதம் குறைந்து, 2,991 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 767 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, கடந்த மூன்று மாதங்களில் காணப்படாத, குறைந்தபட்ச அளவாகும். கடந்த, 2015 ஆகஸ்டில், வர்த்தக பற்றாக்குறை, 1,240 கோடி டாலராக இருந்தது. ஆகஸ்டில், பெட்ரோலியப் பொருட்கள், தோல் மற்றும் ரசாயனங்கள் ஏற்றுமதி, முறையே, 14 சதவீதம், 7.82 சதவீதம் மற்றும் 5 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டிருந்தன. ஏப்., – ஆக., வரையிலான ஐந்து மாதங்களில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சி, 2.98 சதவீதம் சரிவடைந்து, 10,852 கோடி டாலராக இருந்தது.
இதே காலத்தில், இறக்குமதியும், 15.89 சதவீதம் சரிவடைந்து, 14,318 கோடி டாலராக குறைந்தது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 15.89 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,467 கோடி டாலராக குறைந்து உள்ளது.தங்கம் இறக்குமதி குறைந்ததும், வர்த்தக பற்றாக்குறை குறைய காரணம். ஆகஸ்டில், தங்கம் இறக்குமதி, 77.45 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 111 கோடி டாலராக குறைந்துள்ளது.எண்ணெய் இறக்குமதி, 8.47 சதவீதம் குறைந்து, 674 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. எண்ணெய் சாரா பொருட்கள் இறக்குமதி, 15.65 சதவீதம் சரிவடைந்து, 2,244 கோடி டாலராக உள்ளது.
இதனிடையே, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: ஏற்றுமதியில் ஏற்பட்டு வந்த வீழ்ச்சி, பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, மிகவும் குறைந்துள்ளது. ஆகவே, வரும் அக்டோபர் முதல், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி, 28 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|