பதிவு செய்த நாள்
26 செப்2016
23:35
புதுடில்லி : ‘இந்தாண்டு, ஜன., – ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், வெளிநாடுகளுக்கான சரக்கு பெட்டகங்களை கையாண்டதில், இந்தியா, 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது; இதே காலத்தில், சர்வதேச சரக்கு பெட்டக போக்குவரத்து வளர்ச்சி, கடந்த ஆண்டைப் போன்றே, 2.8 சதவீதமாக, மாறுதலின்றி உள்ளது’ என, மார்ஸ்க் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதார மந்தநிலையில் இருந்து மெல்ல மீளத் துவங்கியுள்ளன. இதனால், அந்நாடுகளுக்கு, இந்தியா கையாளும் சரக்கு பெட்டகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு துறைமுகங்களில் சரக்கு பெட்டகங்களை கையாள்வதில், மும்பையில் உள்ள, ஜவஹர்லால் நேரு துறைமுகம், 55 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
கடந்த, 1989 மே முதல் செயல்பட்டு வரும் இத்துறைமுகம், முதன்முறையாக, 2015 – 16ம் நிதியாண்டில், தலா, 20 அடி நீளம், 8 அடி உயரம், 8.6 அடி அகலம் உள்ள, 44.90 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு, சாதனை படைத்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 44.70 லட்சமாக இருந்தது. இத்துறைமுகம், வரும், 2022 – 23ம் நிதியாண்டில், 1 கோடி சரக்கு பெட்டகங்களை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளது.சரக்குகளை பெட்டகத்தில் அடைத்து ஏற்றுமதி செய்வதிலும், இறக்குமதி செய்வதிலும், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
‘உலகளவில் இந்தியா, தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது’ என, பன்னாட்டு நிதியம் பாராட்டி உள்ளது. இந்தியாவின் சரக்கு பெட்டக போக்குவரத்தில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள், 33 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. அதனால், அந்நாடுகளின் எழுச்சி, இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.இந்தாண்டு, இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சவூதி அரேபியா, துருக்கி, கென்யா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
ஏற்றுமதியில், அளவின் அடிப்படையில் காய்கறிகள், 56 சதவீதம்; பழங்கள் மற்றும் கொட்டை வகைகள், 42 சதவீதம்; திராட்சை, 180 சதவீதம் மற்றும் ஆடைகள் பிரிவு, 13 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. வாகனத் துறை ஏற்றுமதி, 9 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய சந்தைகளும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகின்றன. நடப்பாண்டு, இந்தியாவின் வர்த்தகம், சர்வதேச வர்த்தகத்தை விட, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 8 – 9 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவின் இறக்குமதியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, சவுதி அரேபியா ஆகியவை முன்னணியில் உள்ளன. மொத்த இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதில், மின்னணு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|