பதிவு செய்த நாள்
09 அக்2016
01:18
புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, இணையதள வணிக விற்பனை, இம்மாதத்தில் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளதாக, ‘ரெட்செர்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள், நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, அதிகளவில் பொருட்களை விற்பனை செய்ய தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதற்காக, அவை, வாடிக்கையாளர்களுக்கு, தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளன. இணையதள வணிக நிறுவனங்கள், பண்டிகை கால விற்பனையை, அக்., மாதம் முதல் வாரத்திலேயே துவக்கி விட்டன. குறிப்பாக, அக்., 1 முதல், 6 வரை, அந்த நிறுவனங்கள், சலுகை தினத்தை அறிவித்தன. அதன்படி, அந்த நாட்களில் மட்டும், அவை, 3.50 கோடி முதல் 4 கோடி பொருட்களை விற்பனை செய்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம், பண்டிகை கால சலுகை விற்பனையை, அக்., 1ல் துவக்கி, 5ல் முடித்தது. பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் நிறுவனங்கள், அக்., 2ல் சலுகை விற்பனையை துவக்கின. அமேசானின் விற்பனை, கடந்த ஆண்டை விட, நடப்பு பண்டிகை சீசனில், மூன்று மடங்கு அதிகரித்து, 1.50 கோடி பொருட்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவில், இணையதள வணிகத்தில் முதன் முறையாக, பிளிப்கார்ட் நிறுவனம், ஒரே நாளில், 1,400 கோடி ரூபாயை தாண்டி விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் பண்டிகை கால விற்பனை, தீபாவளியுடன் முடிவடையும் என, தெரிகிறது.
இணையதள வணிக சந்தை, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்காக, அந்த நிறுவனங்கள், விற்பனையை விரிவுபடுத்தும் வகையில், கிடங்குகள் கட்டுதல், லாஜிஸ்டிக் போன்றவற்றில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, வாடிக்கையாளருக்கு, பொருட்களை உடனடியாக, ‘டெலிவரி’ செய்ய பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஆகியவை, தற்காலிகமாக, 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கின. இதையடுத்து, இம்மாதத்தில் மட்டும், இணையதள வணிக விற்பனை, 11 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை எட்டும் என, மதிப்பிட்டு உள்ளதாக, அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|