பதிவு செய்த நாள்
09 அக்2016
01:28
புதுடில்லி:‘‘இந்திய நிறுவனங்கள், அவற்றின் சந்தைப் போட்டி திறனை, சுயமாக மதிப்பீடு செய்து கொள்வதற்கு வசதியாக, வலைதளத்தில் உதவி மையம் அமைக்கப்படும்,’’ என, சந்தைப் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், டி.கே.சிக்ரி தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:நிறுவனங்கள், அவை சார்ந்துள்ள சந்தையில் நிலவும் போட்டி குறித்தும், அதை சமாளிக்கக் கூடிய ஆற்றல், எந்த அளவிற்கு உள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்கும் வசதியாக, வலைதளத்தில் தனி உதவி மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, சட்ட நிறுவனங்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தயாரிக்கப்படும் வரைவறிக்கை அடிப்படையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், ஒரு நிறுவனம், பிறர் உதவியின்றி, சந்தையில் நிலவும் போட்டி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள முடியும். அத்துடன், அத்தகைய சந்தைப் போட்டியில், அந்நிறுவனத்தின் நிலை என்ன என்பதையும், தெரிந்து கொள்ளலாம். இதனால், ஒரு நிறுவனம், தன் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து, அதற்கேற்ப, வணிக கொள்கைகளை வகுத்துக் கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, நிறுவனங்கள், பிற நிறுவனங்களை இணைத்துக் கொள்வதிலும், கையகப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த செப்., வரை, இணைப்பு மற்றும் கையகப்படுத்துவது தொடர்பாக, 436 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வந்துள்ளன. மத்திய அரசு, சுலபமாக தொழில் துவங்க வசதியாக, பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கிஉள்ளது. அவற்றில் ஒன்றாக, நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கும் காலம், ஒரு மாதத்தில் இருந்து, 22 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
சந்தைப் போட்டி விதிமீறல்கள் தொடர்பாக, இதுவரை, 700 வழக்குகள் விசாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 600க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. சந்தையில், ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து, பொருட்களின் விலையை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு, கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சந்தைப் போட்டி கட்டுப்பாட்டு சட்டங்கள் குறித்து, கடந்த ஆறு மாதங்களில், 66 விழிப்புணர்வை பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|