பதிவு செய்த நாள்
15 அக்2016
07:02
புதுடில்லி : ‘போதுமான அளவிற்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது’ என, இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம் : இந்தியா, உணவுப் பொருள் உற்பத்தியில் வலிமையாக உள்ளது. பருவ நிலையும், குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையாட்களும், நம் நாட்டிற்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. இருந்தும், 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, உணவு பதப்படுத்துதல் துறையின் முழுமையான ஆற்றலை பயன்படுத்தி, வளர்ச்சி காண, பல்வேறு அம்சங்கள் தடையாக உள்ளன.உணவு பதப்படுத்துதல் தொழில் வளர்ச்சிக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதி மிகவும் முக்கியம். அதற்கு, விவசாயிகள், உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் இடையே, ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள், வேளாண் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும், உயர்தரத்தில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும், தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும்.
வேளாண் ஏற்றுமதி மண்டலங்களை விரிவுபடுத்தி, ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். வேளாண் பொருட்களை சேமித்து வைக்க, நாடு முழுவதும் பரவலாக, குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள சிறிய நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, பொருட்களின் தரத்தை மேம்படுத்த முடியாமல் உள்ளன. அந்நிறுவனங்களிடம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான தர அளவீடு குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.
இக்குறைபாட்டை போக்கி, சிறிய நிறுவனங்களும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் தரத்தை, தொடர்ந்து கண்காணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வேளாண் துறை போல் அல்லாமல், உணவு பதப்படுத்துதல் துறைக்கு, சிறப்பு திறன் பெற்றவர்கள் தேவை. அதனால், இளைஞர்களுக்கு, இத்துறை சார்ந்த பயிற்சி திட்டங்களை பரவலாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அன்னிய முதலீடுடில்லியில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், உணவு பதப்படுத்துதல் தொழில் வளர்ச்சி, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, சட்டங்களை எளிமையாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆந்திரா முதலிடம்இந்தியாவில் பதிவு பெற்ற, 35,800 உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் உள்ளன. அதில், ஆந்திரா, 9,000 தொழிற்சாலைகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், தமிழகம், 5,191, மஹாராஷ்டிரா, 2,935, பஞ்சாப், 2,756, உத்தர பிரதேசம், 2,040 தொழிற்சாலைகளுடன் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|