பதிவு செய்த நாள்
16 அக்2016
05:35
கோவா:‘‘இந்தியா, மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், நாட்டின் பொருளாதாரம், அடுத்த, 12 – 18 மாதங்களில், திடீரென மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது,’’ என, புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர், கே.வி.காமத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், நன்கு உள்ளன; எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் செயல்பாடுகள், இதே வேகத்தில் தொடர வேண்டும். இதன் மூலம், அடுத்த, 12 – 18 மாதங்களில், இந்திய பொருளாதாரம், திடீரென மிகப்பெரிய வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இதற்கு, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது உட்பட, மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணம் எனலாம்.பணவீக்கம் சரிவடைந்ததால், வங்கி வட்டி விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த வரிவிதிப்பு அமலானால், பலமுனை வரிப் பிரச்னை முடிவிற்கு வரும்.
மத்திய அரசு, கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர அறிமுகப்படுத்திய, ‘வருமான அறிவிப்பு திட்டம்’ குறிப்பிடத்தக்க வருவாயை அளித்துள்ளது. அது போல, உணவுப் பொருட்களை நிர்வகிப்பது தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகளும், சிறப்பான பலன்களை அளித்து வருகின்றன. பொதுத் துறை வங்கிகளின் இடர்பாட்டுக் கடன்களால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் என, கூற முடியாது. மத்திய அரசு, வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில், நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். அது, நாட்டின் முன்னேற்றத்திற்கு துணை புரியும். புதிய வளர்ச்சி வங்கி, அடுத்த ஆண்டு, ரூபாய் அடிப்படையிலான, ‘மசாலா பாண்ட்’ கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல் தலைவர்:பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகியவை, ‘பிரிக்ஸ்’ நாடுகள் என, அழைக்கப்படுகின்றன. இந்நாடுகள், அவற்றின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, என்.டி.பி., எனப்படும், புதிய வளர்ச்சி வங்கியை உருவாக்கி உள்ளன. சீனாவின், ஷாங்காய் நகரில் அமைந்துள்ள, இவ்வங்கியின் முதல் தலைவராக, இந்தியரான, கே.வி.காமத், 2015ல் நியமிக்கப்பட்டார்.இவர் ஏற்கனவே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|