பதிவு செய்த நாள்
17 அக்2016
07:34
பொருளாதார நோபல் பரிசு, இந்த ஆண்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிரிட்டன் பொருளாதார மேதை ஆலிவர் ஹார்ட் மற்றும் எம்.ஐ.டி.,யில் பணியாற்றும் பின்லாந்து பொருளாதார மேதை பென் ஹாம்ஸ்டாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார உலகில் ஒப்பந்தங்கள் செயல்படும் விதத்தை சிறப்பாக புரிந்து கொள்ள உதவும், ஒப்பந்த கோட்பாடு தொடர்பான பங்களிப்பிற்காக இவர்கள் நோபல் பரிசு பெறுகின்றனர்.நவீன பொருளாதாரத்தில் ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கித்துறை துவங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கான அடிப்படையாக ஒப்பந்தங்களே அமைகின்றன. தனி மனிதர்களும் கூட பலவித ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றனர். தனி மனிதர்கள், சுயநலம் கொண்டவர்களாக இருந்தாலும், பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இதற்காக பரஸ்பரம் ஒத்துப் போகவும், முரண்களை குறைக்கவும் ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன.ஒப்பந்தங்கள், இரு தரப்பினர் நீண்ட காலத்திற்கு ஒன்றாக சேர்ந்து செயல்படுவதற்கு, வழி வகுக்கின்றன. மேலும் ஒரே இலக்கை அடைவதற்கான விதிமுறைகளை வகுத்துக் கொள்ளவும் உதவுகின்றன. பலவிதமான ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஒப்பந்தங்களில் பலவித சிக்கல்களும் உள்ளன. ஒரு தரப்பிற்கு அதிக தகவல்கள் தெரியலாம். ஒரு தரப்பிற்கு சாதகமாக இருக்கலாம். இந்த பிரச்னைகளை புரிந்து கொண்டு, சிறந்த முறையில் ஒப்பந்தங்களை வகுக்க, ஒப்பந்த கோட்பாடு அடிப்படையாக அமைகிறது.
உதாரணத்திற்கு, ஒரு அம்மா, பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அவர்களுக்கான கேக்கை பங்கு பிரிப்பதில் பிரச்னை வரக்கூடாது என நினைக்கிறார். இதை தவிர்க்க, பெரிய பிள்ளை கேக்கை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றும், ஆனால், அதில் எதை எடுத்துக் கொள்வது என தீர்மானிக்கும் உரிமை இரண்டாவது பிள்ளைக்கு உரியது என்றும் கூறுகிறார். பெரிய பிள்ளை சரிபாதியாக கேக்கை வெட்டினால் மட்டுமே இரண்டாவது பிள்ளைக்கு அது சாதகமாக அமையாமல் இருக்கும். இதுபோன்ற எளிய சுவாரஸ்யமான சம்பவம் முதல், நிறுவனங்களின் சிக்கலான ஒப்பந்தங்கள் வரை, அனைத்து விதமான ஒப்பந்தங்களில் உள்ள பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான கோட்பாடுகளை, நோபல் மேதைகளின் ஆய்வுகள் அளித்துள்ளன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் மேலாளருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாக இருந்தாலும், ஊக்கத் தொகை அதிகம் பெறுவதற்காக, மேலாளர் குறுகிய கால வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால், நீண்டகால வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
கடந்த, 2008ல், அமெரிக்காவில் முதலீட்டு வங்கியாளர்கள் பலர், இப்படி குறுகியகால நலனில் கவனம் செலுத்தி, நீண்டகால ரிஸ்க்கை கவனிக்க மறந்ததால் தான், அந்நாட்டில் வீட்டுக்கடன் நெருக்கடி உண்டானது. இதுபோல ஒப்பந்தங்களில் எழக்கூடிய சிக்கல்களை எல்லாம் புரிந்து கொண்டு செயல்பட, நோபல் மேதைகளின் ஆய்வுகள் வழிகாட்டுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|