பதிவு செய்த நாள்
18 அக்2016
06:11
புதுடில்லி : ‘‘ஏற்றுமதியை மேம்படுத்த, துறைமுகங்கள் அருகே, சரக்குகளை கையாளும் மையங்கள் அமைக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில், ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற, சீரான சரக்கு போக்குவரத்து வசதி அவசியம்.இதை கருத்தில் கொண்டு, துறைமுகங்கள் அருகே, சரக்குகளை கையாள்வது, வினியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் மையங்கள், தனியாருடன் இணைந்து அமைக்கப்படும்.சரக்கு போக்குவரத்தில் உள்ள சங்கடங்களை குறைக்க, மத்திய அரசு முன்னுரிமை அளித்து, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, முக்கிய துறைமுகங்களில், மின்னணு தகவல் பரிமாற்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் சரக்கு போக்குவரத்து விபரங்களை உடனுக்குடன் தெரிந்து, அதற்கேற்ற செயல் திட்டத்தை, ஏற்றுமதியாளர்கள் வகுத்துக் கொள்ள முடியும். ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், சரக்கு போக்குவரத்து கட்டணங்களை குறைக்குமாறு, ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு துவக்கத்தில், வெளிநாட்டு வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. அப்போது, ஏற்றுமதியாளர்களின் நம்பிக்கையை பெற, அக்கொள்கையை மத்திய அரசு நிலையாக கடைபிடிக்கும், நடுத்தர கால அளவில் தான், கொள்கை தொடர்பான மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என, தெரிவித்திருந்தேன். அதன்படி, தற்போது, ஏற்றுமதி வர்த்தக கொள்கை தொடர்பான மறுஆய்வு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
மத்திய அரசு, இந்தியாவில் தொழில் துவங்குவதை சுலபமாக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும், புதுப் புது பிரச்னைகள் தலை துாக்குகின்றன; அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|