பதிவு செய்த நாள்
18 அக்2016
06:11
புதுடில்லி : பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, அடுத்த மூன்று மாதங்களில், ஆடை, மொபைல் போன், வாகனம் உள்ளிட்டவற்றின் விற்பனை, வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, இந்திய வர்த்தக கூட்டமைப்பான, ‘அசோசெம்’, டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்களில், 3,500க்கும் அதிகமான நுகர்வோரிடம் ஆய்வு மேற்கொண்டது. அதனடிப்படையில், ‘அடுத்த மூன்று மாதங்களில், பல்வேறு பொருட்களை வாங்குவது தொடர்பான நுகர்வோரின் தேவை, 40 சதவீதம் அதிகரிக்கும்’ என, அசோசெம் மதிப்பிட்டு உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெருகி வரும் வேலைவாய்ப்புகள், குறைந்து வரும் வட்டி விகிதம் போன்றவற்றால், நுகர்வோரின் தேவை அதிகரித்து, பொருட்களின் விற்பனை, 40 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு, பருவமழை நன்கு உள்ளதால், கிராமப்புறங்களில், பண்டிகை கால பொருட்களுக்கு தேவை அதிகம் இருக்கும். ஏற்கனவே, ஆடைகள், இருசக்கர வாகனங்கள், நகைகள், மொபைல் போன்கள் ஆகியவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது; பயணிகள் கார் விற்பனையும், சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.
பண்டிகை காலத்தையொட்டி, கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில், பல்வேறு பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. மேற்குவங்கத்தில், துர்கா பூஜையும், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், நவராத்திரி விழாவும், பொருட்கள் விற்பனையை உயர்த்தி உள்ளன. டில்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில், தீபாவளி பண்டிகையையொட்டி, அடுத்த சில நாட்களில், பொருட்கள் விற்பனை சூடு பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மூன்று மாதங்களில், நுகர்வோர், மளிகை சாமான்களுக்கு கூடுதலாக, 20 சதவீதம் செலவு செய்வர். இந்த கூடுதல் செலவு, பட்ஜெட் ஆடைகளுக்கு, 52 சதவீதமாகவும், அலங்கார பொருட்களுக்கு, 32 சதவீதமாகவும் இருக்கும் என, அசோசெம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்களை விட, பெண்கள் ஆடைகளுக்கு அதிகம் செலவிடுவர். நுகர்வோர், 15,000 – 35,000 ரூபாய் வரையிலான, மொபைல் போன்களை வாங்க ஆர்வம் காட்டுவர்; கடந்த ஆறு மாதங்களாக, 10,000 – 15,000 ரூபாய் உள்ள மொபைல் போன்களுக்கு, தேவை அதிகம் இருந்தது.
மொபைல் போன்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை வாங்கும் போது, ‘பிராண்டு’ பொருட்களையும், அவற்றின் மதிப்பையும் ஆராய்ந்த பின்னே, வாங்குவது குறித்து, நுகர்வோர் முடிவு செய்வர். வலைதள சந்தை நிறுவனங்கள், அதிகளவில் தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. அதனால், நகரங்களில், வீட்டில் இருந்தபடியே, வலைதளங்கள் மூலம் பொருட்கள் வாங்குவது அதிகரிக்கும் என, அசோசெம் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|