பதிவு செய்த நாள்
18 அக்2016
10:51
தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியை நெருங்குகிறது. தற்போது, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல புதிய சலுகைகளை, பி.எஸ்.என்.எல்., வழங்கி வருகிறது. அத்துடன், மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக வழங்கி வந்த, 'ரோமிங்' வசதியை, மேலும், ஓராண்டிற்கு நீட்டித்துள்ளது. வெளிநாடு சென்றாலும், இலவச ரோமிங் வழங்குகிறது. இதனால், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து, தமிழக தொலைத்தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு ஜூலையில், நாட்டிலேயே அதிகளவில், புதிய மொபைல் இணைப்புகளை, பி.எஸ்.என்.எல்., வழங்கியது. அப்போது, தமிழக தொலைத்தொடர்பு வட்டத்தில், 1.76 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். பின், ஆகஸ்டில், 2.33 லட்சம்; செப்டம்பரில், 1.95 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டன. தற்போது, சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தை சேர்க்காமல், தமிழக தொலைத்தொடர்பு வட்டத்தில் மட்டும், 74.4 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலைத்தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: எங்கள் வட்டத்தில், பல இடங்களில், 'மெகா மேளா' நடத்தினோம். ஜூலையில், 16 ஆயிரத்து 200; ஆகஸ்டில், 22 ஆயிரத்து, 311; செப்டம்பரில், 15 ஆயிரம் புதிய மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தில் மட்டும், மொத்தம், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இரு வட்டங்களையும் சேர்த்து, தற்போது, 90 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிதியாண்டிற்குள், ஒரு கோடி வாடிக்கையாளர்களை தொட்டு விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|