பதிவு செய்த நாள்
18 அக்2016
23:39
மும்பை : ‘ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் போன் சேவையில் இறங்கியுள்ளதை, சூதாட்டத்துடன் ஒப்பிடக் கூடாது; நன்றாக சிந்தித்து, நேர்த்தியான பொறியியல் கட்டமைப்புடன் தான், இவ்வணிகத்தில் நுழைந்துள்ளோம்’ என, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.
அவர், ‘தி பிரின்ட்’ என்ற வலைதள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: தொலைத்தொடர்பு சேவையில், ரிலையன்ஸ் குழுமம், இரண்டாவது முறையாக களமிறங்கி உள்ளது. இந்த முறை, மிகவும் ஆழ்ந்து சிந்தித்து, நவீன பொறியியல் கட்டமைப்புடன், மிக நேர்த்தியான செயல் திட்டத்துடன் களமிறங்கி உள்ளோம். இது, சாதாரண திட்டம் அல்ல; முதற்கட்டமாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இரண்டாவது கட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த அளவிற்கு முதலீடு செய்வதை, சூதாட்டமாக கருதக் கூடாது. இத்தகைய, பிரம்மாண்டமான முதலீட்டில், மிகப்பெரிய சமூக மதிப்பை ஏற்படுத்தாத எந்த செயலையும், ரிலையன்ஸ் செய்யாது. நாங்கள் செயல்படுவதற்கான உரிமத்தை, இந்த சமூகம் வழங்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உள்ளது. அதை, வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் வழங்கும் உரிமமாக நாங்கள் கருதவில்லை. கடைநிலை மக்களுக்கும், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஒருபுறம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புடனும், மறுபுறம், மொபைல் போன் சேவை நிறுவனங்களுடனும், எத்தனையோ பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. அவற்றை, ஆக்கப்பூர்வமான சோதனையாகவே எடுத்துக் கொண்டுள்ளோம். அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு, தலைசிறந்த கல்வி மையத்தில் இடம் கிடைக்கிறது. அது பொறுக்காத சிலர், விடுதியில் மாணவனை, ‘ராகிங்’ செய்வதில்லையா? அது போலத்தான் இதுவும். முன்னணி மொபைல் போன் சேவை நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, ‘உள் இணைப்பு’ கொடுக்காமல் தடை செய்கின்றன.
அது, எனக்கு ஒரு பிரச்னையே அல்ல. அந்நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் வலிமையாக உள்ளதால், அப்படி செய்கின்றன. அவை, எந்த அளவிற்கு தொல்லை கொடுத்தாலும், அதை என்னால் சமாளிக்க முடியும். ஆனால், இப்பிரச்னையால், தொலைத்தொடர்பு சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதுவே, என் நோக்கம்.
அதன்படியே, ரிலையன்ஸ் ஜியோ செயல்படுகிறது; அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், இந்தியாவில், டிஜிட்டல் புரட்சியை, அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
‘‘அடுத்த சில ஆண்டுகளில், டிஜிட்டல், மீடியா, பொழுதுபோக்கு, சில்லரை விற்பனை உட்பட, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் சார் வணிகங்கள் அனைத்தும், அதன் பிரதான எண்ணெய் வர்த்தகத்திற்கு நிகரான வளர்ச்சியை பெறும்’’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|