பதிவு செய்த நாள்
19 அக்2016
23:55
புதுடில்லி : ‘மத்திய அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அளிக்கும் ஆதரவால், சூரிய மின்சக்தி துறை, சிறப்பான வளர்ச்சி காணும்’ என, பி.எம்.ஐ., ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதன் விபரம்: வரும், 2022ம் ஆண்டிற்குள், நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறனை, 100 கிகா வாட் ஆக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றின் கூரைகளில் பொருத்தப்படும், சூரிய மின்தகடுகள் வாயிலான, 40 கிகா வாட் மின் உற்பத்தியும் அடங்கும். இந்தாண்டு ஜூலை நிலவரப்படி, நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறன், 8 கிகா வாட் ஆக உள்ளது. இதுதவிர, 26 கிகா வாட் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபரங்களின் அடிப்படையில், இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன், 2025ல், 53 கிகா வாட் ஆக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட குறைவு. இருந்த போதிலும், மின் துறையில், மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் உள்ளதால், அவை எடுக்கும் கொள்கை முடிவுகள், நாட்டின் சூரிய மின் உற்பத்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, மத்திய பிரதேசம், ‘ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் புன்னகை’ என்ற திட்டத்தை, சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2022க்குள், 2.2 கிகா வாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது. வீடுகளில் சூரிய மின் சாதனங்களை பொருத்தி, மின் உற்பத்தி செய்வோர், தங்கள் தேவை போக, உபரி மின்சாரத்தை, அரசுக்கு விற்பனை செய்ய, இத்திட்டம் வகை செய்கிறது. இது போன்ற திட்டங்கள், நாடு முழுவதும் பரவலாகும்பட்சத்தில், சூரிய மின் உற்பத்தி துறை சிறப்பாக வளர்ச்சி காணும்.
மின்தொகுப்பு, மின் வினியோகம் போன்றவற்றில், கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. இது, வீடுகளில் சூரிய மின் உற்பத்தி மேற்கொள்ளும் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|