பதிவு செய்த நாள்
19 அக்2016
23:56
புதுடில்லி : ‘மத்திய அரசின் சீர்திருத்த கொள்கைகள், ஊக்குவிப்பு திட்டங்கள் ஆகியவற்றால், ஆயத்த ஆடைகள் துறை, மேலும் சிறப்பாக வளர்ச்சி காணும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு, 60 – 65 சதவீதமாக உள்ளது. உலகளவில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், சீனா முதலிடத்திலும், அடுத்து, வங்கதேசம், வியட்நாம், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் உள்ளன; இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய கூட்டமைப்புடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில் தீவிரமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா, வரியின்றி, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை, குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம், வங்கதேசம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் போட்டியை சமாளிக்கலாம்.
சமீபத்தில், மத்திய அரசு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையை ஊக்குவிக்க, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களை அறிவித்தது. அதன்படி, ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், திரும்பப் பெறும் வரி, 7.2 சதவீதத்தில் இருந்து, 10.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித் துறை தொழிலாளர் சட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. வருமானவரிச் சலுகைக்கான, பணியாளர் நியமன வரம்பு குறைக்கப்பட்டு உள்ளது. ஏ – டி.யு.எப்., திட்டத்தின் கீழ், நுாற்பாலைகளை விட, கூடுதலான மூலதன மானியம், நெசவு மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆயத்த ஆடைகளுக்கான, குறிப்பிட்ட பருத்தி மற்றும் செயற்கை நுாலிழைக்கான சுங்க வரி, 5 சதவீதத்தில் இருந்து, 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை, மேலும் சிறப்பாக வளர்ச்சி காணும்.
ஜவுளித் துறையில், சீனாவின் கவனம் குறைந்துள்ளதால், அதன் ஆடைகள் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, சர்வதேச ஆடைகள் சந்தையில் தன் பங்களிப்பை, இந்தியா அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
‛ஆயத்த ஆடைகள் இறக்குமதியில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பான், 7 – 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|