பதிவு செய்த நாள்
26 அக்2016
07:35
புதுடில்லி : இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில், 16 மாநிலங்கள், 80 சதவீதத்திற்கும் அதிகமாக முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்திய தொழில் கொள்கை மேம்பாட்டு துறையான, டி.ஐ.பி.பி., – உலக வங்கியுடன் இணைந்து, இந்தியாவில், சுலபமாக வர்த்தகம் புரிய வசதியுள்ள மாநிலங்களின் பட்டியலை தயாரித்து உள்ளது. எளிமையான தொழில் துவங்கும் நடைமுறை, விரைவான மின் இணைப்பு, சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதி கள் உள்ளிட்ட, 340 அம்சங்களின் அடிப்படையில், மாநிலங் கள் தேர்வு செய்யப்பட்டன.
‘‘அதில், 16 மாநிலங்கள், சுலபமாக தொழில் துவக்கும் வசதியில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக முன்னேற்றம் கண்டு, பட்டியலில் இடம் பிடித்துள்ளன,’’ என, டி.ஐ.பி.பி., செயலர், ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டில் தயாரிப்புத் துறையை மேம்படுத்தவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம், மாநிலங்கள் இடையே, கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. அவை, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுலபமாக தொழில் துவக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகின்றன. சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதனால், அம்மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது.
மாநிலங்கள் இடையிலான இந்த ஆரோக்கியமான போட்டியை, மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், வளர்ச்சிக்கு தடையாக உள்ள, அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், சிக்கலான வரி நடைமுறை போன்ற, சில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, டி.ஐ.ஐ.பி., முயன்று வருகிறது. மாநிலங்கள் விதிக்கும் பல்வேறு வரிகள், தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கின்றன. இதனால், தயாரிப்பு பொருட்கள் விலை உயருகின்றன.
இந்த பிரச்னைக்கு, அடுத்தாண்டு அறிமுகமாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி முடிவு கட்டும். மாநிலங்கள் இடையிலான, சரக்கு போக்குவரத்து சுலபமாகவும், விரைவாகவும் நடைபெறும்; குறித்த காலத்தில், சரக்குகள் சென்று சேரும். இதனால், சரக்குகள் தேங்குவது குறைந்து, பராமரிப்பு செலவு கணிசமாக மிச்சமாகும். மேலும், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் தயாரிப்பு செலவுகள் சீராகும்; நாடு முழுவதும், பொருட்களுக்கு ஒரே விலை நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானுக்கு அழைப்பு :கடந்த, 2015 அக்., நிலவரப்படி, இந்தியாவில், ஜப்பானைச் சேர்ந்த, 1,229 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. மேலும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு, ஜப்பானில், ‘பிக்கி இந்தியா பிளஸ்’ என்ற அலுவலகத்தை திறக்க உள்ளது. இது, இந்தியாவில் தொழில் துவங்க விரும்பும் ஜப்பான் நிறுவனங்களுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|