பதிவு செய்த நாள்
30 அக்2016
23:52
குறையும் வட்டி விகித சூழலில், ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றவர்கள் பழைய பேஸ் ரேட் முறையில் தொடர்வதா அல்லது புதிய வட்டி விகித முறைக்கு மாறுவதா என, தீர்மானிப்பது நல்லது.
வட்டி விகிதம் குறைந்து வரும் சூழல், வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் மத்தியில் முதலீட்டு உத்தியில் மாற்றம் தேவையா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது என்றால், வீட்டுக் கடன் பெற்றவர்கள் மத்தியில் வேறுவிதமான கேள்வியை எழுப்பியுள்ளது. ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ விகிதத்தை குறைப்பது, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வழி செய்யும் என்று கருதப்படுகிறது. ஆனால், ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றவர்களை பொறுத்தவரை வட்டி குறைப்பின் பலன் உடனடியாக சாத்தியமாவதில்லை. இதற்கு காரணம் அவர்கள் கடனுக்கான வட்டி விகிதம் பழைய பேஸ்ரேட் முறையில் கணக்கிடப்படுவது தான்.
கடந்த, 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டிவிகிதம், ‘மார்ஜினல் காஸ்ட் ஆப் பண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட்’ எனப்படும், எம்.சி.எல்.ஆர்., முறையில் கணக்கிடப்படுகிறது. 2010 ஜூலை முதல், 2016 ஏப்ரல் வரை வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு பேஸ் ரேட் முறையில் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது.
புதிய முறையின் பலன்வட்டி விகித குறைப்பு பலனை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் வங்கிகள் தயக்கம் காட்டி வந்த நிலையில், உடனடி வட்டி விகித பலனுக்கு வழிவகுக்கும் எம்.சி.எல்.ஆர்., முறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. பேஸ் ரேட் முறையில் வங்கிகள், வட்டி விகித குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டி வந்தன அல்லது தாமதமாக இந்த பலனை அளித்தன. எனினும், புதிய வட்டி விகித கணக்கீடு முறையின் கீழ், விரைவாக வட்டி விகித குறைப்பின் பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பல வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால் புதிய வாடிக்கையாளர்கள் பயன்பெற்றுள்ளனர். எனினும், பழைய முறையில் தொடரும் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் விரும்பினால் புதிய முறைக்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் பேஸ் ரேட்டில் தொடரும் வாய்ப்பு அல்லது புதிய முறைக்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, மாற்றம் தேவை என கருதும் வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாறிக்கொள்ளலாம்.
இரண்டு வாய்ப்புகள்பேஸ் ரேட் முறையில் இருந்து மாற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கியிடமே கோரிக்கை வைத்து புதிய வட்டி விகித முறைக்கு மாறிக்கொள்ளலாம். பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் நிகழலாம் என்றாலும், இதற்காக கட்டணம் வசூலிக்கவோ அல்லது கடனை முன்கூட்டியே முடிப்பதாகவோ கருதக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை வேறு ஒரு வங்கிக்கு மாற்றிக்கொள்வதன் மூலமும் அந்த வங்கியில் புதிய முறைக்கு மாறலாம். ஆனால், கடன் பெற்ற வங்கியிலே தொடர்வதா அல்லது வேறு வங்கிக்கு மாறுவதா என்பதை தீர்மானிக்கும் முன், கடன் விகிதம் மற்றும் பலன்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
சரியான நேரமா?பழைய முறையில் தொடரும் வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாறுவதை பரிசீலிக்க இது ஏற்ற நேரம் என்றாலும், பல முக்கிய அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர். வட்டி விகிதம் மேலும் குறைய அல்லது தற்போதைய நிலையில் தொடர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே, புதிய முறையில் வட்டி விகிதம் குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், எம்.சி.எல்.ஆர்., முறை வட்டி விகித போக்கிற்கு ஏற்ப மாறக்கூடியது. வங்கிக்கு கடன் கிடைக்கும் விகிதம், டெபாசிட்களுக்கான செலவு விகிதம், நிகர மதிப்பின் மீதான வருவாய் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு எம்.சி.எல்.ஆர்., முறை செயல்படுகிறது. எனவே, ரெப்போ விகிதம் மாறினால் இதுவும் மாறும்.
குறையும் வட்டி விகித சூழலில் இது ஏற்றது என்றாலும், நிலைமை மாறினால் சிக்கலாகலாம். பொதுவாக, வீட்டுக் கடன் காலம் முடியும் தறுவாயில் உள்ளவர்கள் பழைய முறையிலேயே தொடரலாம் என கருதப்படுகிறது. மற்ற வாடிக்கையாளர்கள் இரண்டு வாய்ப்புகளில் எது சிறந்தது என பரிசீலித்து முடிவு செய்வது ஏற்றதாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|