பதிவு செய்த நாள்
31 அக்2016
23:31
புதுடில்லி : இந்திய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், எம்.என்.சி., எனப்படும், பன்னாட்டு நிறுவனங்களை விட, அதிக வருவாய் ஈட்டியுள்ளன என, ‘அசோசெம் – டெக் ஸ்டாடி’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:இந்தியாவில் செயல்படும், இந்துஸ்தான் லீவர், புராக்டர் அண்ட் கேம்பிள் ஹைஜின் அண்ட் ஹெல்த்கேர் உள்ளிட்ட எட்டு பன்னாட்டு நிறுவனங்களும், ஏழு, இந்திய நிறுவனங்களும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், கடந்த நிதியாண்டில், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் மொத்த வருவாய், முறையே, 943 கோடி டாலர் மற்றும் 1,106 கோடி டாலராக உள்ளது தெரிய வந்துள்ளது. சிகரெட், பிஸ்கட், நுாடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும், உள்நாட்டைச் சேர்ந்த, ஐ.டி.சி., நிறுவனத்தின் நிகர லாபம், 25.48 சதவீதம் உயர்ந்து, 151 கோடி டாலராக அதிகரித்து உள்ளது; மொத்த வருவாய், 595 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
வியக்கத்தக்க வளர்ச்சி :இந்தியாவில், ‘ஏரியல், டைட், ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ உள்ளிட்ட பிராண்டுகளில், நுகர்வோர் பொருட்களை விற்கும், அமெரிக்காவின் புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் நிகர லாபம், 17.03 சதவீதம் உயர்ந்து, 6.50 கோடி டாலராகவும், வருவாய், 38 கோடி டாலராகவும் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில், அதிகளவில் வருவாய் ஈட்டியதில், ‘ரின், வீல், லைப்பாய்’ உள்ளிட்டவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வரும், இந்துஸ்தான் லீவர் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், முந்தைய நிதியாண்டை விட, 3.84 சதவீதம் வளர்ச்சி கண்டு, 492 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எனினும், இதன் நிகர லாபம், 12.76 சதவீத அளவிற்கே அதிகரித்து, 63 கோடி டாலராக உள்ளது.
இந்திய நிறுவனங்களில், பிரிட்டானியா, வருவாய் மற்றும் நிகர லாபத்தில், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், டாபர் இந்தியா, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ், மாரிக்கோ, அமுல், பதஞ்சலி ஆயுர்வேதா ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உள்நாட்டு நிறுவனங்களில், பாபா ராம்தேவின், பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், இதர நிறுவனங்களை விட, வருவாயில் வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.
சிறிய நகரங்களிலும் :கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 146.31 சதவீதம் அதிகரித்து, 77 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 31.20 கோடி டாலராக இருந்தது. இந்திய நிறுவனங்கள், அவற்றின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம், செலவினங்களை குறைத்து, வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்கள், புறநகரங்கள், கிராமப்புறங்களில், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வர்த்தக செயல்பாடுகளை அமைத்து முன்னேறி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|