பதிவு செய்த நாள்
02 நவ2016
02:49
புதுடில்லி : ‘இந்திய தயாரிப்பு துறை, அக்டோபரில், 22 மாதங்களில் காணாத வளர்ச்சியை கண்டுள்ளது’ என, ஐ.எஸ்.எஸ்., மார்கிட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த அக்டோபரில், உள்நாட்டு தயாரிப்பு துறையின் வளர்ச்சியை கணக்கிடும், ‘நிக்கி மார்கிட் பி.எம்.ஐ.,’ குறியீட்டு எண், 54.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது; இது, செப்டம்பரில், 52.1 புள்ளிகளாக இருந்தது. தயாரிப்பு துறை சீரிய வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதை, பி.எம்.ஐ., குறியீடு சுட்டிக் காட்டுகிறது.
மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, 46 மாதங்களில் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. அதுபோல, 22 மாதங்களில் காணாத அளவிற்கு, தயாரிப்பு துறையில் புதிய, ‘ஆர்டர்’களின் வளர்ச்சி விகிதம் உள்ளது. தொடர்ந்து, 10வது மாதமாக, தயாரிப்பு துறையின் உற்பத்தி அதிகரித்துள்ளது; நான்கு ஆண்டு களில் இல்லாத வகையில் வளர்ச்சி வேகம் காணப்பட்டது. இதற்கு, புதிய ஆர்டர்கள் அதிக அளவிற்கு குவிந்ததும், அதற்கேற்ப, தேவை அதிகரித்ததும் முக்கிய காரணங்களாகும்.
கடந்த செப்டம்பரில் அமைத்துக் கொண்ட வலுவான அடித்தளமும், தயாரிப்பு துறையின் வேகமான வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது. அக்டோபரில், தயாரிப்பு துறைக்கு கிடைத்த ஆர்டர்களில், கணிசமான அளவு, வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளன. அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து கிடைத்த புதிய ஆர்டர்களின் வளர்ச்சி விகிதம், மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள், தயாரிப்பு துறையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனினும், அது, பணவீக்க உயர்வுக்கும், பொருட்கள் விலை அதிகரிப்பிற்கும் வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை, இந்தாண்டு இறுதி வரை தொடரும் என, தெரிகிறது. ரிசர்வ் வங்கி, அக்., 4ல், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது.
கடந்த, 2015, ஜனவரி முதல் ரெப்போ வட்டி, 1.75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை, டிசம்பர், 7ல் வெளியாக உள்ளது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊக்குவிப்புமத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்கள், தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகின்றன. பல்வேறு துறைகளில், அன்னிய முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், சுலபமாக தொழில் துவங்க, உரிமம் பெறும் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டதும், தயாரிப்பு துறைக்கு ஊக்கமளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|