பதிவு செய்த நாள்
02 நவ2016
02:50
பெங்களூரு: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவன சந்தையில் சரிவு ஏற்பட்டால், அதில் அதிக முதலீடு செய்துள்ள வாணி கோலாவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால் அதற்காக சற்றும் அஞ்சாமல் இருக்கிறார் அவர்.
இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வாணி கோலா(52), கலாரி கேபிடல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். மேலும் பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம் பிடித்துள்ளார். 2006ல் தனது வெஞ்சர் கேபிடல் முயற்சிகளைத் தொடங்கிய இவருக்கு, 60க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. 650 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ள இவர், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், மிந்த்ரா, ஜாஸ்பெர், மெட்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இவர் முதலீடு செய்துள்ளார்.
நடப்பு ஆண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அடி வாங்க ஆரம்பித்துள்ளன. உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் பெரும் சரிவுக்கு உள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் முதலீடுகளைக் குறைத்து விட்டன. ஆனாலும் வாணி கோலா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரச்சினையிலிருந்து மீண்டு வரும் என்பது அவரது நம்பிக்கை.
ஐதராபத்தில் பிறந்த வாணி கோலா, உஸ்மானியா பல்கலையில் இன்ஜினியர் பட்டமும், அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பும் படித்தவர். ஐடி துறை அனுபவம் கொண்ட இவர், அமெரிக்காவில் 22 ஆண்டுகள் வசித்தார். 2006ல் இந்தியா வந்த அவர் 210 மில்லியன் டாலர் முதலீட்டை உருவாக்கினார். இந்தியாவில் செர்டஸ் சாப்ட்வேர் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கிய வாணி, வெளிநாட்டு நிறுவனங்களை விட இங்குள்ள நிறுவனங்களுக்குத்தான் அதிக சாதகமான சூழல் உள்ளதை முதலீட்டாளர்களிடம் தெளிவுபடுத்தி இந்தியாவில் பல முதலீட்டாளர்களை ஈர்த்தார்.
ஈ காமர்ஸ் எதிர்காலம் குறித்து அறியாத காலகட்டத்தில் துணிச்சலாக அதில் கால் பதித்தார். பின் 440 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி, தனது நிறுவனத்தின் மூலம் 84 முதலீடுகளை மேற்கொண்ட வாணி, அதில் 21 ஸ்டார்ட்அப்களை விற்றார்.
2013ல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு கை கொடுத்த வாணி, தனது நிதியிலிருந்து 20 சதவீதத்தை அதில் முதலீடு செய்தார். மேலும் மிந்த்ரா, வயா உள்ளிட்ட பல ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீட்டுக்கு பின் பிளிப்கார்ட்டை வாங்கி சாதனை படைத்தது மிந்த்ரா. வாணி கோலாவை ‛முடியாது என்பதையும் முடியும் என்று நம்புபவர் வாணி’ என ரத்தன் டாடா புகழ்ந்துள்ளார்.
ஒரு தொழில்முனைவோருக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது என்பது அவரது வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அதன் தாக்கம் நாட்டின் பல்வேறு மக்களுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும் எனபதே வாணி கோலாவின் கொள்கை. எனவே சிறுமுதலீட்டாளர்களை உருவாக்க அவர் தீவிரமும், ஆர்வமும் காட்டி வருகிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|