பதிவு செய்த நாள்
10 நவ2016
00:03
புதுடில்லி : ‘மத்திய அரசு, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை அடுத்து, இனி டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும்’ என, தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த, ‘நாஸ்காம்’ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆறிக்கை: மத்திய அரசு, கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்துள்ளது. இந்த நோட்டுகளை, ‘பான் கார்டு’ அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டி, வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ஒருவர் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றும் பட்சத்தில், அவர், வரி வரம்பிற்குள் வந்து விடுவார்.
இதையடுத்து, அவர், ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்துக் கொண்டு, கம்ப்யூட்டர், மொபைல்போன் ஆகியவை மூலம், சுலபமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறுவார். இதனால், கறுப்பு பணப் புழக்கம் கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், மதிப்பு அடிப்படையிலான மொத்த பரிவர்த்தனைகளில், ரொக்கத்தின் பங்களிப்பு, 78 சதவீதமாக உள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் பங்கு, மிகச் சொற்பமாகவே உள்ளது. எனினும், தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கையால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பின்பற்றுவோர் எண்ணிக்கை உயரும்.
வலைதள சந்தை நிறுவனங்கள், பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தந்து, பணம் பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குகின்றன. மின்னணு வணிகத்தில், பெருமளவு, பொருட்களை ஒப்படைத்து, பணம் பெற்றுக் கொள்ளும் முறையில் நடைபெறுகிறது. இந்த முறையில், இடர்பாடு உள்ளதுடன், அதிக போக்குவரத்து செலவையும், மின்னணு வணிக நிறுவனங்கள் சந்திக்கின்றன.அதனால், ரொக்கப் பரிவர்த்தனை குறைந்தால், மின்னணு வணிக நிறுவனங்களின் செலவு மிச்சமாகும்.
அதேசமயம், ரொக்கப் பரிவர்த்தனை, வாங்குவோர், விற்போர் இடையே பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதனால், உடனடியாக ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து விடும் என, எதிர்பார்க்க முடியாது. எனினும், மத்திய அரசின் அறிவிப்பு, கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும். அதேசமயம், அதிக மதிப்புள்ள கரன்சிகள் தான், கறுப்பு பணத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றன.அதனால், 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, கறுப்பு பணப் புழக்கத்திற்கும், ரொக்கப் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்ற அச்சமும் உள்ளது.
இருந்தபோதிலும், மத்திய அரசு எடுத்துள்ள, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை, பலன் கொடுக்கும்பட்சத்தில், நாட்டில், மிகப் பெரிய அளவில், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|