பதிவு செய்த நாள்
12 நவ2016
01:31
புதுடில்லி:இந்திய ஐ.டி., துறை, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நடவடிக்கையால் சந்தித்துள்ள பிரச்னைகளுக்கு, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்கும் டொனால்டு டிரம்ப் மூலம் தீர்வு காண, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு வல்லுனர்களை தற்காலிகமாக பணியமர்த்த, எச் 1பி, எல் 1, எல்.பி., ஆகிய விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கான கட்டணங்களை, ஒபாமா அரசு, இரு மடங்கு உயர்த்தியுள்ளது. அத்துடன், ஓராண்டுக்கு வழங்கும் 65 ஆயிரம் எச் 1பி விசாக்களின் எண்ணிக்கையை, 15 ஆயிரமாக குறைக்கவும், அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால், அமெரிக்காவிற்கு அதிக அளவில் சாப்ட்வேர் சேவைகளை அளித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ஐ.டி., துறைக்கு மேலும் அச்சமூட்டும் வகையில், டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரம் இருந்தது. ‘நான் அமெரிக்க அதிபரானால், இந்தியாவும், சீனாவும் பறித்துக் கொண்ட நம் வேலை வாய்ப்புகளை திரும்பப் பெற்றுத் தருவேன்; எச் 1பி விசாவை அடியோடு ஒழிப்பேன்’ என, அவர் கூறியிருந்தார்.மேலும், குடியேற்ற கட்டுப்பாடு, அமெரிக்கா, இந்தியாவுக்கு வழங்கும் பி.பி.ஓ., பணிகளை குறைப்பது உள்ளிட்ட, அவரது கருத்துக்கள், இந்திய ஐ.டி., துறைக்கு எதிராகவே இருந்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், தேர்தல் பிரசாரத்தின் போது கூறியவற்றை செயல்படுத்தினால், கடுமையாக பாதிப்பு ஏற்படும் என, இந்திய ஐ.டி., துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமெரிக்கா, விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளது குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம், இந்தியா, ஏற்கனவே புகார் அளித்துள்ளது.அத்துடன், விசா பிரச்னை தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. இது தொடர்பாக, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக, புதிய அதிபராக பொறுப்பேற்கும் டொனால்டு டிரம்ப்பின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அவர், இந்திய ஐ.டி., துறையின் கவலைகளை கவனமுடன் கேட்டு, ஆவன செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் சுமை
இந்திய ஐ.டி., துறையின் 60 சதவீத வருவாய், அமெரிக்காவில் இருந்து தான் வருகிறது. புதிய விசா கட்டண உயர்வால், ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக, 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|