பதிவு செய்த நாள்
17 நவ2016
05:41
புதுடில்லி : ‘கரன்சி தட்டுப்பாடு காரணமாக, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவை, வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்’ என, இந்திய தொழிலக கூட்டமைப்பான – சி.ஐ.ஐ., மத்திய நிதியமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சி.ஐ.ஐ., தலைவர் நவுஷத் போர்ப்ஸ் பேசியதாவது: மத்திய அரசு, கறுப்புப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், நாட்டின் நீண்ட கால நன்மையை கருதி எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, குறுகிய காலத்திற்கு, மக்களுக்கு மிகப்பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்தியிருப்பதை, யாரும் மறுக்க முடியாது. மிகப்பெரிய அளவிலான இந்த கரன்சி மாற்றத்திற்கு, வங்கிகள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
அதே சமயம், திரும்பப் பெறப்படும் பழைய கரன்சிகளுக்கு ஈடாக, புதிய கரன்சிகளை உடனடியாக புழக்கத்தில் விட வேண்டியது அவசியமாகும்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு, 10 சதவீதமாகவும், மொத்த பணப்புழக்கத்தில், 85 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வகையில், நிதிச் சந்தையில் இருந்து, பெருமளவு பணத்தை திடீரென திரும்பப் பெற எடுத்த நடவடிக்கையால், மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
கரன்சிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து, ஒரு வாரமாகியும், இன்னும் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பணத்தை எடுக்க, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணப்புழக்கம் குறைந்துள்ளதால், சில்லரை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மூன்று மாத நடப்பு கணக்கு உள்ள நிறுவனங்கள், வாரத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரைதான் வங்கியில் இருந்து எடுக்க முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சில்லரை வர்த்தக நிறுவனங்களின் நிதியாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது; நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தால் தான், அவை, பாதிப்பில் இருந்து மீள முடியும்.
பணப்புழக்க பிரச்னை, அடுத்த மாதமும் நீடித்தால், அது, கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு வருவாயில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவை, ஊழியர்களின் ஊதியம், நிர்வாகச் செலவு உள்ளிட்டவற்றை சமாளிக்க வசதியாக, வங்கியில் பணம் எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பை, உடனடியாக உயர்த்த வேண்டும். பணப்புழக்கம் அதிகரித்தால் தான், நிறுவனங்களின் செயல்பாடு, இயல்பு நிலைக்கு திரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|