பதிவு செய்த நாள்
18 நவ2016
01:02
புதுடில்லி : ‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் – பி.பி.எம்., துறை, சோதனைகளை கடந்து, மிதமான வளர்ச்சியுடன் காணப்படுகிறது’ என, தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாடு மற்றும் சர்வதேச காரணிகளின் தாக்கத்தில் இருந்து, தகவல் தொழில்நுட்பம் – பி.பி.எம்., துறை விடுபட்டு வருகிறது. இத்துறை, சோதனை காலத்தை கடந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில், இத்துறை, 8 – 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில், எஞ்சியுள்ள பல்வேறு காரணிகளின் தாக்கம், அடுத்து வரும் காலாண்டுகளில் எதிரொலிக்கும்.
சர்வதேச அளவில், இத்துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதில், இந்தியாவின் வலிமையான பங்களிப்பு தொடரும். இத்துறை, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட நவீன வழிமுறைகளில், தொடர்ந்து முதலீடு செய்து வருவதன் மூலம், வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள், அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றால் ஏற்படும், குறுகிய கால தாக்கத்தை சமாளிக்க கூடிய வலிமையுடன், ஐ.டி., துறை விளங்குகிறது.
நவீன வர்த்தகங்கள் மற்றும் சமுதாயத்தின் ஓர் அங்கமாக, தொழில்நுட்பமும் மென்பொருள் பயன்பாடும் உள்ளன. சர்வதேச அளவில், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை துறைகள், 2017ல், முறையே, 7.2 சதவீதம், 4.4 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காணும்.இந்திய ஐ.டி., – பி.பி.எம்., துறை, வலிமையான அடித்தளத்தை கொண்டுள்ளதால், 2025ல், இத்துறையின் சந்தை மதிப்பு, 35 ஆயிரம் கோடி டாலராக உயரும்.கடந்த, 2014 முதல், இத்துறையின், டிஜிட்டல் சேவைகளுக்கான ஒதுக்கீடு, இரு மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்திய நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு, அதிகளவில் முதலீடு செய்து, ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|