பதிவு செய்த நாள்
18 நவ2016
23:29
புதுடில்லி : ‘இந்திய சாப்ட்வேர் துறையின் வருவாய், வரும், 2017ல், 580 கோடி டாலராக உயரும்’ என, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதன் விபரம்:மத்திய அரசு, அனைத்து துறைகளிலும் மின்னணு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. தயாரிப்புத் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் மூலம், மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது; டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவது; டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு, மிக வேகமாக பரவி வருகிறது. பல நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகளில், தகவல் தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகள் துறை நிறுவனங்கள், பணிகளை தவறின்றி, விரைந்து செய்வதற்கு, ‘ரோபோ’ சாப்ட்வேர்களை பயன்படுத்த துவங்கியுள்ளன. அத்துடன், மேகக் கணினி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட, நவீன வழிமுறைகளையும் பின்பற்றி, செலவுகளை குறைத்து வருகின்றன.இது போன்ற புதிய தொழில்நுட்பங்களால், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களுக்கு, தேவை அதிகரித்து உள்ளது. இதனால், சாப்ட்வேர் உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் உயர்ந்து வருகிறது. இந்தாண்டு, சாப்ட்வேர் துறை வருவாய், 520 கோடி டாலராக இருக்கும்; இது, 2017ல், 580 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|