பதிவு செய்த நாள்
22 நவ2016
05:41
மும்பை : ‘மத்திய அரசின் கரன்சி கொள்கையால், குறுகிய காலத்திற்கு சிமென்ட் தேவை குறையும்’ என, ‘டாய்ச்சி பேங்க் மார்க்கெட்ஸ் ரிஸர்ச்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்துள்ளதால், குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் சுணக்கமான சூழல் உருவாகிஉள்ளது. இதனால், டிச., வரை சிமென்டிற்கான தேவை, 15 – 20 சதவீதம் குறையும். அடுத்த ஆண்டு ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், சிமென்ட் தேவை சார்ந்த வளர்ச்சி, 3 சதவீதம் சரியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சிமென்ட் தேவை, 2018 – 19ம் நிதியாண்டில் சிறப்பாக அதிகரிக்கும் என, கணிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 2019 – 20ம் நிதியாண்டாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்பு துறையில் சிமென்ட் தேவை குறைந்தபோதிலும், அதை அடிப்படை கட்டமைப்பு துறையின் ஒரு சில பிரிவுகள் ஈடு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், சிமென்ட் தேவை குறையும். அடுத்த, 12 – 18 மாதங்களில், கிழக்கு பகுதியில், சிமென்ட் பயன்பாடு மிக அதிக அளவில் வீழ்ச்சி அடையும். எனினும், மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டங்கள், ரயில்வே துறையின் கட்டுமான திட்டங்கள் ஆகியவற்றில், சிமென்ட் பயன்பாடு அதிகரிக்கும்.
மத்திய அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால், மாநில அரசுகளின் வருவாய் குறைந்துள்ளது. இதனால், கிராமப்புற சாலைகள், நகர்ப்புற மேம்பாடு, குடியிருப்பு, நீர் பாசனம் உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறையும். இதுவும், சிமென்ட் தேவை வளர்ச்சியை பாதிக்கும். இதனால், குறுகிய கால அளவில், சிமென்ட் விலை குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|