பதிவு செய்த நாள்
28 நவ2016
05:11
வங்கிகளில், ‘டிபாசிட்’ குவியும் நிலையில், வட்டி விகிதம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்களின் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும்?ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், பொதுமக்கள், வங்கிகளில் பழைய நோட்டுகளை, டிபாசிட் செய்து வருகின்றனர். வீட்டில், அவசரத் தேவை மற்றும் சேமிப்பிற்காக என, வைத்து இருந்த தொகையையும், டிபாசிட் செய்து வருகின்றனர். இதனால், வங்கிகளில் டிபாசிட் செய்யப்படும் தொகை அதிகரித்துள்ளது.
இதுவரை, ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிபாசிட் தொகை அதிகரித்து வருவதால், வங்கிகள் டிபாசிட்டிற்கு அளிக்கும் வட்டி விகிதம் குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அமைப்பிற்குள் அதிக பணம் வந்துள்ள, நிலை வட்டி விகிதத்தின் மீது தாக்கம் செலுத்தும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும், பணவீக்க விகிதமும் கட்டுக்குள் இருப்பதால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. டிச., 7ல், ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையில் இதற்கான முடிவை அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 25 முதல், 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், நிதித் துறை வட்டாரங்களில் கருதப்படுகிறது.
மாற்று வாய்ப்புகள்
வட்டி விகிதம் குறையும் சூழலில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படலாம். இது, அவற்றின் மூலம் கிடைக்கும் பலன் மீது தாக்கம் செலுத்தும். ஏற்கனவே, வைப்பு நிதி மூலம் பலன் குறைவாக இருப்பதாக கருத்து நிலவுகிறது. இந்த சூழலில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் தங்கள் அணுகுமுறை பரிசீலனை செய்யும் நிலை உண்டாகும். இந்நிலையில், பலரும் அஞ்சலக டிபாசிட் மற்றும் அரசு பத்திரங்களை நாடத் துவங்கியிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கி வைப்பு நிதிகளுக்கு, 7 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. அஞ்சலக சேமிப்பிற்கு, 7.8 சதவீத வட்டி மற்றும் அரசு பத்திரங்களுக்கு, 8 சதவீத வட்டி கிடைக்கிறது. எனவே, பலரும் இவற்றை நாடி வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வைப்பு நிதி வட்டி வருமானத்தை சார்ந்திருக்கும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இதர முதலீட்டாளர்களுக்கு, அரசு சேமிப்பு பத்திரங்கள் ஏற்றவை என, வல்லுனர்கள் கூறுகின்றனர். இவை, ஆறு ஆண்டு காலம் கொண்டவை. இவற்றில், 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஆனால், இவற்றில் பணத்தை உடனடியாக எடுத்துக் கொள்ளும் வசதி இல்லாததை, மனதில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
கடன் பத்திரங்கள்
சேமிப்பு பத்திரங்கள் தவிர, டெப்ட் பண்டு ரகத்தைச் சேர்ந்த, மியூச்சுவல் பண்டு திட்டங்களையும், முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம் என்று வல்லுனர்கள் சொல்கின்றனர். வட்டி விகிதம் குறையும் சூழலில், இவை ஏற்றதாக இருக்கும் என்கின்றனர். இளம் முதலீட்டாளர்களுக்கு, இவை உகந்தவை என்ற கருத்தும் இருக்கிறது.
மேலும், வரி இல்லா பத்திரங்களையும் பரிசீலிக்கலாம் என்கின்றனர். குறிப்பாக, அதிக வரிப்பிரிவில் இருப்பவர்களுக்கு, இவை ஏற்றவையாக இருக்கும் என, கருதப்படுகிறது. வரி இல்லா பத்திரங்கள் வெளியிடப்பட்ட போது, முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. எனினும், இந்த நிதியாண்டில் புதிய வெளியீடுகள் இல்லை. எனினும், இவற்றை பங்குச்சந்தை பரிவர்த்தனை மூலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.இது போலவே, வர்த்தக நிறுவனங்கள் டிபாசிட் திட்டங்களையும் பரிசீலிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இவற்றுக்கான வட்டி விகிதம் அதிகம் என்றாலும், பாதுகாப்பு அம்சம், ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்டியல் சேமிப்பு
இதே போலவே, வீட்டில் குழந்தைகள் கல்வி மற்றும் எதிர்கால செலவிற்காக, உண்டியலில் சேமித்து வைத்திருக்கும் பணத்தையும் கூட, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழலில், இந்த தொகையும் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருப்பதால், இவற்றின் மீது நல்ல பலனை பெற, குழந்தைகள் பெயரில், மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம் என, கூறுகின்றனர்.
குறைந்த தொகையில் கூட, முதலீட்டை துவக்கலாம் என்கின்றனர். எஸ்.ஐ.பி., என குறிப்பிடப்படும், மாத அல்லது காலாண்டு அடிப்படையில், குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் திட்டங்களையும் நாடலாம் என்கின்றனர். பிள்ளைகள், 18 வயதை அடையும் வரை, பெற்றோர் அல்லது பாதுகாவலர் இவற்றை இயக்கலாம். அதன்பின், உரிய சான்றிதழ் சமர்ப்பித்து, மேஜரான பிள்ளைகள் இயக்கிக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|