பதிவு செய்த நாள்
02 டிச2016
00:07
ஈரோடு: ‘‘பருத்தி நுாலிழை விலை வீழ்ச்சியடைந்து வருவதால், கடந்த மூன்று நாட்களில், ஈரோடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள, 2,000 விசைத்தறி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன,’’ என, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:கடந்த வாரம், 1 கிலோ, 40ம் நம்பர் பருத்தி நுாலிழை, 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, தற்போது, 180 ரூபாயாக குறைந்துள்ளது. அதனால், பேசிய விலையை விட, மீட்டருக்கு, 3 ரூபாய் குறைத்து கொடுக்குமாறு, ஜவுளிக்கு, ‘ஆர்டர்’ கொடுத்தவர்கள் வற்புறுத்துகின்றனர்.
உற்பத்திச் செலவு அதிகரிப்பால், விலையை குறைக்க முடியாத நிலையில், விசைத்தறியாளர்கள் உள்ளனர். இது போன்ற பிரச்னைகளால், வேறுவழியின்றி, 2,000 விசைத்தறி ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. நுாலிழை விலை மீண்டும் சரிந்தால், மேலும், 8,000 விசைத்தறி ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வணிகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தலைவர், என்.சிவனேசன் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற, ஒரு பேல் பருத்தியின் விலை, தற்போது, 46 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இது, இம்மாதம், புதிய பருத்தி வரத்து வரும்பட்சத்தில், 40 ஆயிரம் ரூபாயாக குறைய வாய்ப்புள்ளது. இதனால், பருத்தி நுாலிழை மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பருத்தி மற்றும் நுாலிழைக்கு, ஒரு மாதத்திற்கு, நிலையான விலையை, ஜவுளி அமைச்சகம் நிர்ணயிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|