பதிவு செய்த நாள்
03 டிச2016
04:28
புதுடில்லி:நோக்கியா நிறுவனம், புதிதாக இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய இருப்பதன் மூலம், இழந்த சந்தையை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. எத்தனை ஸ்மார்ட் போன்கள் புதிது புதிதாக வந்தாலும், இந்தியர்களால் மறக்க முடியாத போன் என்றால், அது, நோக்கியா ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
ஒரு கட்டத்தில், ‘டபுள் சிம்’ என்ற புதிய ஐடியா வர, மற்ற போன்கள் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. ஆனால், அந்த வாய்ப்பை தவறவிட்டது நோக்கியா. பின், ‘ஐ போன், ஆண்ட்ராய்டு’ போன்கள் வரவும், தன் செல்வாக்கை மொத்தமாக இழந்து போனது நோக்கியா. இதையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியாவின் மொபைல் போன் வணிகத்தை வாங்கியது. ஆனால், அதனால் மைக்ரோசாப்டுக்கு பெரிய அடிதான் கிடைத்தது.
மைக்ரோசாப்ட், நோக்கியாவை வாங்கும் போது, நோக்கியா புதிய போன்கள் தயாரிப்பதற்கு, குறிப்பிட்ட காலம் வரை தடை விதித்திருந்தது. அந்த தடைக்கான காலவரையறை முடிந்துவிட்டதால், புதிய போன்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது நோக்கியா.
புதிய போன்கள் தயாரிப்புக்காக, எச்.எம்.டி., குளோபல் நிறுவனத்துடன், நோக்கியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து, நோக்கியாவின் பெயர் மற்றும் முக்கியமான தொழில்நுட்ப உரிமைகளை பயன்படுத்தி, எச்.எம்.டி., குளோபல் போன்களை தயாரித்து வெளியிடும். விற்கப்படும் ஒவ்வொரு போனுக்கும், நோக்கியாவுக்கு ராயல்டி கிடைக்கும்.
தற்போது, ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப அடிப்படையில், புதிதாக இரு மொபைல் போன்களை, நோக்கியா தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இவை, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டிலோ சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தினம், 10 புதிய போன்கள் சந்தையில் அறிமுகமாகி வரும் நிலையில், நோக்கியா தாக்குப்பிடிக்குமா என்பது, முக்கியமான கேள்விதான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|