பதிவு செய்த நாள்
03 டிச2016
04:30
புதுடில்லி:‘இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்குவதற்கு, ‘சிவப்பு நாடா’ முறையும், ஊழலும், தடைக்கற்களாக உள்ளன’ என, இங்குள்ள நார்வே நிறுவனங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.இந்தியாவில், குறிப்பாக, கடல்சார் துறையின் தொழில் வாய்ப்புகள், எதிர்கால வர்த்தக சூழல் ஆகியவை குறித்து, நார்வே நிறுவனங்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
தாமதம்:தேசிய நார்வே வர்த்தகக் கூட்டமைப்பு, மும்பையின், நார்வே துணை துாதரகம், டில்லியின், நார்வே துாதரகம் ஆகியவை இணைந்து, முதன்முதலாக இந்த கருத்துக் கணிப்பை நடத்திஉள்ளன. இதில், இந்தியாவில் உள்ள நார்வேயைச் சேர்ந்த, 101 நிறுவனங்களில், 83 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த ஆய்வு குறித்து, நார்வே நாட்டின் இந்திய துாதர், நில்ஸ் ரக்னர் கம்ஸ்வக் கூறியதாவது:நார்வே நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. ஆனால், ஏகப்பட்ட விதிமுறைகள் காரணமாக, கோப்புகள் நகர்வதில் தாமதம் உண்டாகிறது. இத்தகைய சிவப்பு நாடா முறையும், ஊழலும், முதலீட்டிற்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாக, நார்வே நிறுவனங்கள் கருதுகின்றன.
இருந்த போதிலும், மத்திய அரசு, சுலபமாக தொழில் துவங்க வசதியாக, பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால், தற்போதைய வர்த்தக சூழல், முதலீட்டிற்கு சாதகமாக உள்ளதாக, ஆய்வில் பங்கேற்ற, 62 சதவீத நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில், முதலீட்டுச் சூழல், மேலும் சாதகமாக இருக்கும் என, 75 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.
தொழிலாளர்களின் ஊதிய விகிதம் உயர்ந்து வருவது குறித்தும், நார்வே நிறுவனங்கள் யோசிக்கின்றன. தங்கள் தொழில் சார்ந்த சந்தை விரிவடைய, 70 சதவீத நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஏற்ற இடமாக, இந்தியா உள்ளது என, 68 சதவீதத்தினர் தெரிவித்து உள்ளனர்.
வாய்ப்புகள்
வலைதளங்களில் புதுமையாக தொழில் செய்யும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை துவக்க, இந்தியா உகந்த நாடு என, 55 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். சர்வதேச பொருளாதார சூழலை ஒப்பிடும் போது, இந்தியா மட்டுமே பிரகாசமான வளர்ச்சி காணும் நாடாக உள்ளது. இத்துடன், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, கடலோர படகு போக்குவரத்து, கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுதல் உள்ளிட்ட கடல்சார் துறைகளிலும், வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளதாக, பெரும்பான்மையான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.துறைமுகங்களை நவீனமயமாக்குவது, நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துவது, திரவ எரிவாயுவில் சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்வது போன்றவற்றின் மூலம், கடல்சார் துறை சிறப்பான வளர்ச்சி காணும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|