பதிவு செய்த நாள்
10 டிச2016
05:00
மும்பை:பன்முக பயன்பாட்டிற்கான ஜவுளிகளுக்கு, சிறப்பு ஊக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டதன் மூலம், அத்துறையில், 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, பருத்தி ஜவுளிகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர், உஜ்வல் லஹோத்தி கூறியதாவது:மத்திய அரசு, ஏற்கனவே, ஜவுளித் துறையின் மேம்பாட்டிற்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறப்பு ஊக்கச் சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது, பன்முக ஜவுளிகள் துறைக்கும், சிறப்பு ஊக்கச் சலுகைகள் அளிக்க, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இத்துறையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 11 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
பன்முக ஜவுளி பிரிவில், படுக்கை விரிப்பு, திரைச் சீலை, மேசை விரிப்பு, துண்டு, தார்பாலின், பைகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இப்பிரிவு, கிராமப்புறங்களைச் சேர்ந்த, ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. அதை, மேலும் அதிகரிக்கும் விதத்தில், மத்திய அரசு சிறப்பு சலுகை திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதன்படி, ஜவுளித் துறையில், ஆடைகள் பிரிவிற்கு அளிக்கப்பட்டது போல், டி.யு.எப்.எஸ்., உள்ளிட்ட திட்டங்களில், கூடுதலாக, 10 சதவீத மானியம் பன்முக ஜவுளித் துறைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இத்துறை தொழிலாளர்களின் காலாண்டிற்கான, ‘ஓவர் டைம்’ வரம்பு, 100 மணி நேரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன், 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மாத ஊதியம் பெறுவோர், விரும்பினால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், மத்திய அரசின் சலுகையால், பன்முக ஜவுளித் துறையில் உள்ள நிறுவனங்களும், தொழிலாளர்களும் பயன் பெறுவர்; வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|