பதிவு செய்த நாள்
10 டிச2016
05:03
புதுடில்லி:நாட்டில், ரொக்கம் சாராத, ‘டிஜிட்டல்’ வழியிலான பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு, தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பின்படி, டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, பெட்ரோல், டீசல் வாங்கினால், லிட்டருக்கு, 0.75 சதவீத தொகை, தள்ளுபடி கிடைக்கும். புறநகர் ரயில்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணத்தில், 2017 ஜன., 1 முதல், 0.5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
ஆன்லைன் முலம் முன்பதிவு செய்யும் ரயில் பயணிகளுக்கு, 10 லட்சம் ரூபாய், விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 2,000 ரூபாய் வரையிலான, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.மின்னணு முறையில், பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால், முறையே, 10 மற்றும் 8 சதவீதம் தள்ளுபடி என்பது உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்துடன், வியாபாரிகளுக்கான, ‘பாய்ன்ட் ஆப் சேல்’ எனப்படும், கையடக்க மின்னணு சாதனத்திற்கு, வங்கிகள் வசூலிக்கும் மாத வாடகை, 400 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த, பி.ஓ.எஸ்., பரிவர்த்தனைக்காக, வியாபாரிகள், வங்கிகளுக்கு செலுத்தும் கட்டணமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இத்துடன், 4.32 கோடி விவசாயிகளுக்கு, ‘ரூபே’ கிசான் கார்டு வழங்கவும், கிராமங்களில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்திய இணையம் மற்றும் மொபைல் போன் கூட்டமைப்பின் தலைவர் சுபோ ராய்:டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர், நேரடியாக பயன்பெறும் வகையில், முதன்முறையாக அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வரவேற்கத்தக்கது. இதனால், மக்களின் ரொக்கப் பரிவர்த்தனை குறையும். அவர்கள், ரொக்கம் சாரா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவர்.எம்.எஸ்.மணி, மூத்த இயக்குனர், டெலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் எல்.எல்.எபி.: இந்திய பொருளாதாரம், பணப் பரிவர்த்தனையில் இருந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற, அரசின் சலுகை திட்டங்கள் உதவும். மக்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள், மொபைல் போன் வாயிலாக, பணம் செலுத்துவது பரவலாகும்.
பிரமோத் சக்சேனா, தலைவர், ஆக்சிஜன் சர்வீசஸ்:மக்களிடம் ரொக்கம் தேங்குவது குறையும்; சேமிப்பு பெருகும்; வட்டி வருவாய் கிடைக்கும். நவீன் சூர்யா, தலைவர், இந்திய பணப் பரிவர்த்தனை அமைப்பு:மின்சாரம், மொபைல் போன், தொலைதுார ரயில் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணங்களுக்கும், தள்ளுபடி சலுகைகளை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் சலுகைகள், மக்களுக்கு மட்டுமின்றி, நிதித் துறையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்னணு பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|