பதிவு செய்த நாள்
13 டிச2016
01:29
புதுடில்லி:‘நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து வருவதால், நடப்பு அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், தயாரிப்பு துறை ஓரளவு வளர்ச்சி காணும்’ என, இந்திய வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி’யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:வாகனம், பொறியியல், சிமென்ட், ரசாயனம், மின்னணு, மின்சாரம் உள்ளிட்ட, 12 துறைகளைச் சேர்ந்த, 332 தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு நிலவரம் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், நடப்பு மூன்றாம் காலாண்டில், ஏற்றுமதி அதிகரிக்கும் என, 46 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன; இது, இரண்டாம் காலாண்டு குறித்த ஆய்வின் போது, 41 சதவீதமாக இருந்தது.
இதே காலத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சி காணும் என, தெரிவித்த நிறுவனங்கள், 55 சதவீதத்தில் இருந்து, 63 சதவீதமாக அதிகரித்துள்ளன; வளர்ச்சி இருக்காது என, 11 சதவீத நிறுவனங்கள் கருத்து கூறியுள்ளன.
மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நவம்பரில், தயாரிப்பு துறையில் புதிய, ‘ஆர்டர்’ வருவது குறைந்து, மந்தமான சூழல் நிலவுவதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், 48 சதவீத நிறுவனங்கள், நடப்பு காலாண்டிற்கு, அதிக ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறியுள்ளன.
ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், உற்பத்தி திறனை அதிக அளவில் பயன்படுத்தியதாக, 43 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருந்த போதிலும், எதிர்கால முதலீடுகளில், நிறுவனங்களிடம் ஆர்வம் குறைந்திருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.அடுத்த ஆறு மாதங்களுக்கு, உற்பத்தி திறனை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என, 73 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர்.
இது, நடப்பு மூன்றாவது காலாண்டில், 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.மலிவான இறக்குமதி பொருட்களால் ஏற்பட்டுள்ள போட்டி, தொழில் துறையின் தேவை குறைந்துள்ளது போன்றவற்றால், விரிவாக்க திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|