பதிவு செய்த நாள்
14 டிச2016
03:29
புதுடில்லி:‘‘ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து தகவல்கள் மற்றும் ஆய்வு விபரங்களை, மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்,’’ என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர், அருணா சுந்தர்ராஜன் வலியுறுத்தி உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது:அரசின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு நெறிகளுக்கும், அவற்றை நிறுவனங்கள் பின்பற்றுவதற்கும் இடையே, அதிக இடைவெளி இருக்கும்; இந்த யதார்த்த நிலைக்கு, ஸ்டார்ட் அப் துறையும் விதிவிலக்கல்ல. ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளையோ அல்லது வரிவிதிப்பு முறைகளையோ, சம்பந்தப்பட்ட துறையினரின் ஆலோசனையின்றி, மேம்படுத்த முடியாது.
இது, ஸ்டார்ட் அப் துறைக்கும் பொருந்தும். ஆகவே, இத்துறை மேம்பாடு காண வேண்டுமென்றால், அரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட முன்வர வேண்டும்; துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த விபரங்களையும், ஆய்வுகளையும், அரசு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மத்திய அரசு ஏற்பாடு செய்த பல கலந்தாய்வுக் கூட்டங்களில், ஸ்டார்ட் அப் துறை சார்ந்த, மூத்த பிரதிநிதிகளில் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் தவிர்த்ததை, நான்கண்டிருக்கிறேன்; அப்படியே கலந்து கொண்டாலும், அறிக்கை சமர்ப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இத்தகைய சூழல் நிலவும் போது, ஸ்டார்ட் அப் துறையினரின் பிரச்னைகளை, அரசு எப்படி அறிந்து கொள்ளும்? ஆகவே, ஸ்டார்ட் அப் துறையினர், தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அம்சங்களை, அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவற்றுக்கு விரைந்து தீர்வு காண வசதியாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அனைத்து தகவல்களையும், ஆய்வு விபரங்களையும் வெளிப்படையாக, அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியா, மிகப்பெரிய சந்தை வாய்ப்புடன், விரைவாக புதிய தொழில்நுட்பத்தை தழுவும் நாடாக விளங்குகிறது.
இது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, குறிப்பிடத்தக்க வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஒரே பிரிவில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, அதிகம்கவனிக்கப்படாமல் உள்ள துறைகளில் நுழைய வேண்டும். குறிப்பாக, இந்தியாவில், வேளாண் துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடுபவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையில், அமெரிக்கா முதலிடத்திலும், அடுத்து, பிரிட்டன், இந்தியா ஆகியவையும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|