பதிவு செய்த நாள்
17 டிச2016
01:26
‘‘வெள்ளம், புயல் வந்தாலும், தமிழகத்தில், கார் உற்பத்தி தொடரும்,’’ என, பி.எம்.டபிள்யூ., இந்தியா நிறுவன தலைவர், பிராங்க் – இ ஷ்லோடர் தெரிவித்தார்.
ஜெர்மனியைச் சேர்ந்த, பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம், ‘ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ, மினி’ என, மூன்று வகை கார்கள், பி.எம்.டபிள்யூ., பைக்குகளை தயாரித்து வருகிறது. அதில், ‘மினி’ என்பது, சிறிய ரக கார்.
இந்தியாவில், தற்போது, ‘திரி டோர், பைவ் டோர், கன்வர்டிபிள், கன்ட்ரிமேன்’ ஆகிய நான்கு வகை, ‘மினி’ கார்கள் கிடைக்கின்றன. அடுத்த வரவான, மினி – கிளப்மேன் காரை, பிராங்க் – இ ஷ்லோடர், மும்பையில், நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார்.
பின், நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:இந்த கார், ஜெர்மன் தொழில்நுட்பமும், பிரிட்டிஷ் வடிவமைப்பும் சேர்ந்த அற்புத கலவை. மினி வகைகளில், இது பெரியது. நீண்ட துார பயணத்திற்கு, குடும்பத்துடன் செல்ல வசதியானது.பின்புறத்தில், ரிமோட் மூலம் திறக்கும், இரு கதவுகள் இருப்பது புதுமை. பின்புற சீட்டை மடக்கலாம் என்பதால், பொருட்கள் வைக்கும் இடத்தை, மூன்று மடங்கு அதிகரித்து கொள்ளலாம்; இருக்கைகளை, ரிமோட் மூலம் சரிசெய்யலாம்.
ஸ்டார்ட் செய்த, 7.2 வினாடிகளில், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தை எட்டலாம். அதிகபட்ச வேகம், 228 கி.மீ., என, முக்கிய அம்சங்களின் பட்டியல் நீளும். தமிழகத்தில், காஞ்சி மாவட்டத்தில், 2007ல் துவங்கிய, பி.எம்.டபிள்யூ., கார் உற்பத்தி ஆலையில், சில மாதங்களுக்கு முன், 50 ஆயிரமாவது கார் வெளி வந்தது. 2015ல், வெள்ளம் ஏற்பட்ட போது பணிகள் பாதித்தன. தற்போது, வர்தா புயல் தாக்கியுள்ளது. இது, இயற்கையின் சீற்றம்; கணிக்க முடியாதது.
அதனால், தமிழகத்தை விட்டு போகும் எண்ணமில்லை. இப்போதைக்கு, இரண்டாவது ஆலை துவங்கும் எண்ணமில்லை. ஜெயலலிதாவிற்கு பின், பொறுப்பேற்றுள்ள, முதல்வர் பன்னீர்செல்வம், முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்வார் என, நம்புகிறோம். பி.எம்.டபிள்யூ., பைக், 2017ல், அறிமுகம் ஆகும். ஓசூரில் உள்ள, டி.வி.எஸ்., நிறுவன ஆலையில் அது தயாராகும். இவ்வாறு அவர் கூறினார். – நமது சிறப்பு நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|