பதிவு செய்த நாள்
17 டிச2016
01:29
மும்பை:இந்தாண்டு, 26 நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு, 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டிக் கொண்டன. இது, கடந்த ஆண்டு திரட்டப்பட்டதை விட, இரு மடங்கு அதிகம். கடந்த, 2010ல், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 37,535 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அதன்பின், இந்தாண்டு தான், மிக அதிக அளவில் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்தாண்டு, சேவைகள், சிறிய வங்கி, காப்பீடு, மருத்துவ ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 26 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மேம்பட்டு வருகிறது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ எடுத்து வரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளால், முதலீட்டாளர்களுக்கு, பங்கு வெளியீடுகள் மீதான நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் வறட்சிக்கு பின், இந்தாண்டு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இது போன்ற சாதகமான அம்சங்களால், பல்வேறு நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் வரை அதிக அளவில் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. அதன்பின், அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பும், அந்நாட்டின் மத்திய வங்கி, வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும், சில நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளை தள்ளிப் போட வைத்தன.
இந்நிலையில், நவ., 8ல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் சேர்ந்து கொள்ள, புதிய பங்கு வெளியீட்டு சூழல் முடங்கியுள்ளது. இந்தாண்டு, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கிய பெரும்பான்மையான நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை அளித்துள்ளன. 70 சதவீத நிறுவனங்களில், பங்கு வெளியீட்டு விலையை விட, 25 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களின் பங்குகள் விலை மட்டுமே, வெளியீட்டு விலையை விட, குறைந்து உள்ளன.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், இந்தாண்டு, 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, 1,100 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன. இப்பிரிவில், கடந்த ஆண்டு, 252 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் ஆண்டில், புதிய பங்கு வெளியீடுகள் மேலும் சூடு பிடிக்கும் என, பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|