பதிவு செய்த நாள்
20 டிச2016
00:07
மும்பை : ‘புதிய துறைமுக ஆணையங்கள் சட்டத்திருத்த மசோதா, நாட்டின் முக்கிய, 12 துறைமுகங்களின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவும்’ என, ‘கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டீஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசு, முக்கிய துறைமுகங்களுக்கு முழு சுயஅதிகாரம் அளித்து, ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளுடன், நேர்த்தியான நிர்வாக நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக, 1963ம் ஆண்டின், முக்கிய துறைமுக பொறுப்பு கழக சட்டத்தில் திருத்தங்கள் செய்து, புதிய வரைவு மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒப்புதல்இதற்கு, கடந்த வாரம், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு மசோதா, சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும் போது, நாட்டின் முக்கிய, 12 துறைமுகங்கள் மிகச் சிறப்பான வளர்ச்சி காணும். ஏற்கனவே, 2015 –16ம் நிதியாண்டில், பெரும்பான்மையான முக்கிய துறைமுகங்கள் நன்கு செயல்பட்டு, சிறப்பான வருவாய் ஈட்டியுள்ளன. இந்நிலையில், புதிய மசோதாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால், இனி, முக்கிய துறைமுகங்கள் மேலும் சிறப்பாக செயல்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துறைமுகங்களில், அரசு மற்றும் தனியார் கூட்டுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பணிகள் சூடு பிடிக்கும்; அதிகளவில், விரிவாக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். கடந்த பல ஆண்டுகளாக, தனியார் நிர்வகித்து வரும் சிறிய துறைமுகங்கள், முக்கிய துறைமுகங்களை விட, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இனி, இத்தகைய சிறிய துறைமுகங்களுக்கு, கடும் போட்டியாக, முக்கிய துறைமுகங்கள் விளங்கும்.
புதிய சட்டம், தற்போது, முக்கிய துறைமுகங்களில், அரசு மற்றும் தனியார் கூட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கும், இனி மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்களுக்கும் பொருந்தும்.முக்கிய துறைமுகங்களில், அரசு, தனியார் கூட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் சேவைகளுக்கு, அவை, சுயமாக கட்டணம் நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமையை, புதிய மசோதா வழங்குகிறது.
தனி வாரியம்அத்துடன், முக்கிய துறைமுகங்களில், இதர முனையங்களில், சேவை கட்டணத்தை நிர்ணயிக்க, தனி வாரியம் அமைக்கவும், மசோதா வகை செய்கிறது. மேலும், முக்கிய துறைமுகங்களின் இயக்குனர் குழுக்களுக்கு, முதலீடு மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதி குறித்து முடிவெடுக்கவும், நடைமுறை மூலதன தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புதிய மசோதா, அதிகாரம் வழங்குகிறது. அத்துடன், துறைமுக தேவைகளுக்காக, 40 ஆண்டுகளும், இதர பயன்பாடுகளுக்காக, 20 ஆண்டுகளும், நிலத்தை குத்தகைக்கு விடும் உரிமையும் வழங்கப்படுகிறது. இது போன்ற பல அம்சங்கள் காரணமாக, முக்கிய துறைமுகங்களின் வர்த்தகம் பெருகும்; வருவாய் உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|