பதிவு செய்த நாள்
28 டிச2016
00:06
கூர்கான்: ‘‘அடுத்த இரு மாதங்களில், விவசாய பயிர்களுக்கான உரங்கள், விதைகள் விற்பனையிலும், ‘டிஜிட்டல்’ எனப்படும், மின்னணு பணப் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்படும்,’’ என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்து உள்ளார்.மத்திய அரசு, ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், ‘அதிர்ஷ்ட வாடிக்கையாளர் திட்டம்’ மற்றும் ‘டிஜிட்டல் நிதி வியாபாரிகள் திட்டம்’ என, இரு பரிசு திட்டங்களை அறிவித்துள்ளது.மேலும், நாடு தழுவிய அளவில், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை குறித்தவிழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது.அதன்படி, நாட்டிலேயே முதன்முதலாக, ஹரியானா மாநிலம், கூர்கான் நகரில், ‘டிஜிதன் மேளா’ என்ற மின்னணு பரிவர்த்தனை விழிப்புணர்வு கண்காட்சி துவங்கி உள்ளது. இதற்கான விழாவில், மத்திய அமைச்சர் அனந்த குமார், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அனந்த குமார் பேசியதாவது:ஹரியானா முழுவதும், மின்னணு கலாசார மாநிலமாக மாறி வருவது பாராட்டத்தக்கது. இம்மாநிலம், ‘பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம்’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. அத்துடன், பத்திரப்பதிவு, கலால் வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட, 170க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை, மின்னணு முறையில் மேற்கொள்கிறது. தற்போது, மின்னணு பரிவர்த்தனைவிழிப்புணர்வு கண்காட்சியையும், முதன்முதலாக நடத்துகிறது.இக்கண்காட்சியில், காய்கறிகள் முதல், குளிர்சாதன பெட்டி வரை, அனைத்து பொருட்களையும் ரொக்கமில்லா மின்னணு முறையில் வாங்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.அத்துடன், மின்னணு பணப் பரிவர்த்தனையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது. இதனால், சாதாரண மக்களும், மின்னணு பணப் பரிவர்த்தனையை சுலபமாக மேற்கொள்ள முடியும்.மத்திய அரசு, உரங்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையிலும், மின்னணு பணப் பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்து உர முகவர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், அடுத்த இரு மாதங்களில், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறுவர். விவசாயிகளும், மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் உரம் மற்றும் விதைகள் வாங்கலாம். அதே சமயம், வழக்கம் போல ரொக்கத்தில் வாங்கும் வசதியும் நீடிக்கும். விவசாயிகள், தங்களுக்கு விருப்பமான பரிவர்த்தனையை தேர்வு செய்யலாம். நாடு முழுவதும், 100 நகரங்களில், 2017 ஏப்., 14 வரை, மின்னணு பரிவர்த்தனை விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறும். இதன் மூலம், விவசாயிகள் உட்பட ஏராளமானோர், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|