பதிவு செய்த நாள்
30 டிச2016
04:40
புதுடில்லி : ‘இந்தியாவில், ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு வாயிலான பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, அளிக்கப்பட்டு வரும் சேவை வரி விலக்கை, தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்’ என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நிதிச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், மக்களிடையே வங்கிச் சேவையை பரவலாக்கவும், மின்னணு பணப் பரிவர்த்தனையை, மத்திய அரசு ஊக்குவிக்கிறது. மக்கள், ரொக்க பயன்பாட்டை குறைத்து, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான கொள்கை திட்டம் வகுக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், பல மாநில முதல்வர்களை கொண்ட, உயர்மட்டக் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.
டில்லியில் நடைபெற்ற, இக்குழுவின் கூட்டத்தை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது: மின்னணு பணப் பரிவர்த்தனை தொடர்பான செயல் திட்டங்கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான இந்தியர்களை மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற்ற, ஊக்க சலுகைகளுடன் கூடிய, நீண்ட கால கொள்கை திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, ‘ஆதார்’ அடையாள எண் மற்றும் மேம்பட்ட, யு.பி.ஐ., தொழில்நுட்பம் மூலம், மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இத்துடன், கோடிக்கணக்கான மக்கள் மின்னணு பணப் பரிவர்த்தனையை சுலபமாக மேற்கொள்ள தேவையான, தொழில்நுட்ப வசதி, பரிவர்த்தனை திறன் ஆகியவையும் மேம்படுத்தப்படும்.
தற்போது, சாதாரண மொபைல் போனிலும் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான அப்ளிகேஷன் வசதிகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதனால், 60 கோடிக்கும் அதிகமானோர், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு சுலபமாக மாற முடியும். ரொக்கத்தை விட, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு கூடுதலாக செலவானால், மக்கள், மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைக்கே மாறி விடுவர். அதனால், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு அளிக்கப்பட்டுள்ள சேவை வரி விலக்கு, டிச., 31 வரை மட்டுமின்றி, 2017 மார்ச் 31க்குப் பின்னும், வருங்காலத்திலும் நீடிக்க வேண்டும். இத்தகைய பரிந்துரைகளுடன் கூடிய கொள்கை திட்ட அறிக்கை, ஒரு வாரத்தில், பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய அம்சங்கள்● மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான, சேவை வரி விலக்கு, டிச., 31க்குப் பின்னும் நீட்டிக்க வேண்டும்● ஸ்மார்ட்போன் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகைகள் ● ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு மானியம் குறித்தும் பரிசீலிக்கலாம்● மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு, 1444 என்ற உதவி மைய எண் விரைவில் அறிமுகம்● வணிகர்கள் பயன்படுத்த, 10 லட்சம், ‘பாய்ன்ட் ஆப் சேல்’ சாதனங்கள் இறக்குமதி செய்யப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|