பதிவு செய்த நாள்
03 ஜன2017
00:10
புதுடில்லி : ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வரியை குறைத்து, அவற்றுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை நீக்கினால், அன்னிய முதலீடுகள் அதிகளவில் குவியும்’ என, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, தற்போது, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், ஆயத் தீர்வு, கூடுதல் வரி ஆகியவையும் வசூலிக்கப்படுகின்றன. அதே சமயம், நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கான வரியை கணக்கிடுகையில், 32 வகையான வரிச் சலுகைகளை பெறவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால், நிறுவனங்களின் நிகர வரி, 19.8 சதவீதம் என்றளவிற்கு வருகிறது.எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை நீக்கி விட்டு, 18 சதவீத நிகர வரி விதிக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சகத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், வரி வரம்பிற்குள் வருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பல முனை வரிக்கு பதிலாக, சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர உள்ளதால், நிறுவன வரியை குறைப்பதால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது. வரியை குறைத்தால், அது, மேலும் பல நிறுவனங்களை வரி செலுத்த ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி, சிங்கப்பூர், பிரிட்டன் போல கவர்ச்சிகரமான முதலீட்டு மையமாக இந்தியா உருவெடுக்கும். கறுப்புப் பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வரி சீர்திருத்தங்கள், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கான ஊக்குவிப்பு சலுகைகள் போன்றவை, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்க உதவும்.
மின்னணு பரிவர்த்தனைகளை சுலபமாக கண்காணிக்க முடியும் என்பதால், சரக்கு மற்றும் சேவை வரி திட்ட செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதுடன், வரி வசூலும் அதிகரிக்கும். இந்தியாவில், மீண்டும் அதிக அளவில் முதலீடுகள் குவியவும், அமைப்பு சார்ந்த துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும், உயர்கல்வி மையங்களில், ஆய்வுக்கான முதலீடுகள் பல மடங்கு பெருகவும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய நிதியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி, அடுத்த நான்கு ஆண்டுகளில், 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்படும். -அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், 2016 – 17ம் நிதியாண்டின் பட்ஜெட் உரையில்...
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|