பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:47
புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிகளில் உள்ள, ஒருசில அம்சங்கள், ஐ.டி., துறையை பாதிக்கும் வகையில் உள்ளன’ என, ‘நாஸ்காம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, பல முனை வரிகளை நீக்கி, நாடு தழுவிய அளவில், ஒரே சீரான வரி விதிப்பிற்கு வழிவகுக்கும், சரக்கு மற்றும் சேவை வரியை, வரும் ஏப்., முதல் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், ‘‘சரக்கு மற்றும் சேவை வரி விதிகளில், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பத் துறையை பாதிக்கும் அம்சங்களுக்கு தீர்வு காண வேண்டும்,’’ என, ஜி.எஸ்.டி., குழுவிடம், நாஸ்காம் தலைவர், ஆர்.சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: இந்தியா, ஐ.டி., துறை ஒன்றில் தான், உலக நாடுகளை விஞ்சி நிற்கிறது. தற்போது, இத்துறையும், சர்வதேச அளவில் எழுந்துள்ள, உள்நாட்டு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை, தாராள மயமாக்கல் எதிர்ப்பு போன்ற சவால்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய விதிகளின்படி, ஜி.எஸ்.டி., அமலானால், ஐ.டி., துறை உள்நாட்டிலும், பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது, ஐ.டி., நிறுவனங்கள், ஒற்றை சேவை ஒப்பந்தத்தின் கீழ், உள்நாடு அல்லது வெளிநாடுகளில் உள்ள, பல வாடிக்கையாளர்களுக்கு சாப்ட்வேர் சேவைகளை வழங்குகின்றன.
தற்போதைய, ஜி.எஸ்.டி., வரைவு விதி, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்கப்படும் சாப்ட்வேர் சேவைக்கான வருவாயை மதிப்பீடு செய்ய வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் கிளைகள் உள்ள, ஐ.டி., நிறுவனங்களுக்கு இந்த நடைமுறை சாத்தியமற்றது. இதனால், மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறுவது தொடர்பான கணக்கீட்டிலும் குழப்பம் ஏற்படும். மேலும், இத்திட்டத்தால், ஐ.டி., நிறுவனங்கள், அவற்றின் அடிப்படை கட்டமைப்பு சாப்ட்வேரில் மாற்றங்கள் செய்ய வேண்டும். ஆகவே, சரக்கு மற்றும் சேவை வரியில், ஐ.டி., துறைக்கு, ஒரே சேவையின் கீழ், வரி செலுத்தும் பிரிவும், விருப்பத் தேர்வாக இடம் பெற வேண்டும்.
சாப்ட்வேர் என்பது, சரக்கு பிரிவில் வருமா அல்லது சேவையில் சேர்க்கப்பட வேண்டுமா என, முன்பு விவாதம் எழுந்த போது, அது மறைமுக சேவை என, தீர்மானிக்கப்பட்டது. அது, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான முந்தைய வரைவு மசோதாவிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தற்போது அது குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. தற்போதைய சேவை சட்டத்தின்படி, சாப்ட்வேர் விற்பனை, சேவைகள் பிரிவில் உள்ளது. இது, ஜி.எஸ்.டி., சட்டத்திலும் இடம் பெற வேண்டும். அதில், அனைத்து மின்னணு பதிவிறக்கங்களும், சேவை பிரிவைச் சேர்ந்தவை என, தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இத்தகைய கோரிக்கைகள் அடங்கிய மனு, ஜி.எஸ்.டி., குழுவிடம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|