பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:19
புதுடில்லி : ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு, 2016 – 17 நிதியாண்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி இருக்கும்’ என, ‘கிரிசில்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், நவ., 24 – டிச., 24 வரை, 1,100க்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 58 சதவீத நிறுவனங்கள், தயாரிப்பிலும், எஞ்சியவை, சேவை துறையிலும் ஈடுபட்டுள்ளன. ஆய்வில் பங்கேற்ற, 58 சதவீத நிறுவனங்கள், நகரங்களிலும், 53 சதவீத நிறுவனங்கள், சிறிய மற்றும் சிற்றுார்களிலும் இயங்கி வருகின்றன. பாதிக்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஆண்டு வருவாய், 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், அதிகளவில் ரொக்கப் பரிமாற்றத்தை சார்ந்துள்ள, ஜவுளி, வேளாண் பொருட்கள், உருக்கு, நுகர்வோர் சாதனங்கள், கட்டுமானம், வாகனங்கள் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, குறித்த நேரத்தில் கடனை திரும்ப செலுத்தாமல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல், பல்வேறு நெருக்கடிகளை, நிறுவனங்கள் சந்தித்துள்ளன. இதில், அதிகம் பாதித்தது, உருக்கு நிறுவனங்கள் தான். அதை தொடர்ந்து, ஜவுளி, சரக்கு போக்குவரத்து, கட்டுமான துறை நிறுவனங்கள் உள்ளன.
அதே சமயம், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் ஐ.டி., சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில், பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஏப்., – செப்., வரையிலான அரையாண்டில், மருந்து, ஐ.டி., சேவைகள், வாகன உதிரிபாகங்கள், வாகன முகவர்கள், நுகர்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றின் விற்பனை, சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்தால், 42 சதவீத நிறுவனங்கள், காசோலை அல்லது மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு மாறியுள்ளன. பெரிய நகரங்களை விட, நகரங்கள், சிறிய நகரங்களில் ரொக்கப் பரிவர்த்தனை அதிகம் என்பதால், அங்குள்ள நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வருவாய், நடப்பு நிதியாண்டில், 15 – 20 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டிருந்தது; இது, தற்போது, 6 – 8 சதவீதமாக குறையும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள், ‘இந்த தற்காலிக பாதிப்பு, ஜூன் மாதத்திற்குள் சீராகி விடும்’ என, கூறியுள்ளன. வழக்கமாக, அக்., – மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடு நன்கு இருக்கும். அதனால், பண மதிப்பு நீக்க பாதிப்பிலும், நடப்பு நிதியாண்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|