பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:35
புதுடில்லி : இழப்பை குறைத்து, நிதிநிலையை சீர்செய்யுமாறு, பொதுத் துறையைச் சேர்ந்த, இரு பொது காப்பீட்டு நிறுவனங்களை, மத்திய நிதிஅமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான அரையாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், 429 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இந்நிறுவனம், நிகர லாபமாக, 356 கோடி ரூபாய் ஈட்டியிருந்தது. அது போல, நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், 382 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இந்நிறுவனம், 335 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தது. இந்நிறுவனங்கள் அதிகம் பிரீமியம் வசூலித்த போதிலும், புயல், தீ விபத்து போன்றவற்றுக்கு, பெருந்தொகையை இழப்பீடாக வழங்க நேரிட்டதால், இழப்பை சந்தித்துள்ளன.
இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், வங்கித் துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் போவதாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். அத்துடன், பொதுத் துறையைச் சேர்ந்த, பொது காப்பீட்டு நிறுவனங்களை, பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நடவடிக்கைக்கு முன், பொது காப்பீட்டு நிறுவனங்களின் நிதிநிலை நன்றாக இருக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதனால், இரு நிறுவனங்களிடம், இழப்பை குறைத்து, நிதிநிலையை உயர்த்துமாறு கூறப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள், பங்குச்சந்தையில் நுழைவதன் மூலம், அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரிய வரும். பங்கு முதலீட்டாளர்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்புக்கும் அவை ஆளாகும். இது, பொது காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். அத்துடன், பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், 52 காப்பீட்டு நிறுவனங்களில், ஆயுள் காப்பீட்டில், 24 நிறுவனங்களும், பொது காப்பீட்டில், 28 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. பொதுத் துறையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும், இ.சி.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி., என்ற இரு சிறப்பு காப்பீட்டு நிறுவனங்களும் உள்ளன. ஆயுள் காப்பீட்டு துறையில், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|