பதிவு செய்த நாள்
11 ஜன2017
01:25
நியூயார்க் : ‘‘பொருளாதாரத்தின் சக்தி பீடமாக உருவாகும் ஆற்றல், இந்தியாவிற்கு உள்ளது,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள, விரால் ஆச்சார்யா தெரிவித்து உள்ளார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக, உர்ஜித் படேல் பொறுப்பேற்றதை அடுத்து, அவர் வகித்த துணை கவர்னர் பதவிக்கு, விரால் ஆச்சார்யா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், வரும், 20ம் தேதி, ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை உருவாக்குதல்; அன்னியச் செலாவணி; நிதிச் சந்தை செயல்பாடுகளை கண்காணித்தல்; ஆய்வு மற்றும் புள்ளிவிபர பணிகளை, அவர் மேற்கொள்வார்.
நியூயார்க் ஸ்டெர்ன் பல்கலையில், நிதித் துறையின் பொருளாதார பேராசிரியரான, விரால் ஆச்சார்யா ஆற்றிய உரை: இந்திய பொருளாதாரம் உற்சாகமாக உள்ள போதிலும், அதற்கு சவால் விடுக்கும் வகையில், தற்போதைய சூழல் உள்ளது. உலகில், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. பொருளாதார சக்தி பீடமாக உருவாகும் ஆற்றல், இந்தியாவிற்கு உள்ளது. நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும், அதே சமயம், சர்வதேச பொறுப்பினை கட்டிக் காக்க தேவையான கொள்கைகளை உருவாக்குவதில் பங்கேற்று, இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றி உள்ளார்.
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உடன் இணைந்து, மூன்று ஆய்வுக் கட்டுரைகளை, விரால் ஆச்சார்யா வெளியிட்டு உள்ளார். ‘ரகுராம் ராஜன், எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக உள்ளார்’ என, விரால் ஆச்சார்யா ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|