பதிவு செய்த நாள்
13 ஜன2017
00:31
புதுடில்லி : படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, துண்டு உள்ளிட்ட வீட்டு பயன்பாட்டு ஜவுளி தயாரிப்பு நிறுவனங்களுக்கு, கூடுதலாக, 10 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜவுளித் துறையில், ஆயத்த ஆடைகளுக்கு அடுத்து, வீட்டு பயன்பாட்டு ஜவுளி பிரிவு தான், அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இத்துறையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 11 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை, 460 கோடி டாலரில் இருந்து, 740 கோடி டாலராக அதிகரிக்கவும், மத்திய ஜவுளி அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதையொட்டி, கடந்த ஆண்டு, வீட்டு பயன்பாட்டு ஜவுளி தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மூலதன முதலீட்டு மானியச் சலுகை அறிவிக்கப்பட்டது. இதன்படி, 30 கோடி ரூபாய் வரையிலான மூலதன முதலீடுகளுக்கு, 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தற்போது, இந்த மானியச் சலுகைக்கு தகுதியான நிறுவனங்கள், கூடுதலாக, 20 கோடி ரூபாய் வரை, மூலதன முதலீடு மேற்கொண்டால், 10 சதவீத மானியம் வழங்கப்படும் என, ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் மானியம், ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு, வேலைவாய்ப்பு, விற்றுமுதல் ஆகியவற்றின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படும்.வீட்டு பயன்பாட்டு ஜவுளி ஏற்றுமதியில், சீனா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஜவுளி தயாரிப்பை அதிகரிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும், கடந்த ஆண்டு, 6,006 கோடி ரூபாய் மதிப்பிலான, சிறப்பு ஊக்கச்சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|