பதிவு செய்த நாள்
13 ஜன2017
00:33
புதுடில்லி : ‘இந்திய நிறுவனங்களிடம், கணினி மூலம் நடைபெறும் தகவல் திருட்டு, பண மோசடி உள்ளிட்ட, ‘சைபர்’ தாக்குதலை தடுப்பதற்கான பாதுகாப்பு வசதி, போதுமான அளவிற்கு இல்லை’ என, ‘எர்னஸ்ட் அண்ட் யங்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், 2016 ஜூன் – ஆக., வரை, பல்வேறு துறைகளில் உள்ள, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த, 124 தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துக்களை தொகுத்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், அரசு மற்றும் பங்குச்சந்தை பட்டியலில் உள்ள, சில நிறுவனங்களின் உயரதிகாரிகளின் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
ஆய்வறிக்கை விபரம்: சைபர் தாக்குதலை சமாளிக்க, தேவையான பாதுகாப்பு வசதிகள் தங்கள் நிறுவனங்களில் இல்லை என, 75 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். சைபர் தாக்குதலின் பாதிப்பை, தங்கள் நிறுவனத்தின் இயக்குனர் குழு முழுமையாக அறியாமல் உள்ளதாக, 38 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.கடந்த ஓராண்டில், சைபர் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளதாக, 69 சதவீதத்தினரும், அடுத்த ஓராண்டிற்குள் உயர்த்த உள்ளதாக, 75 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.சைபர் பாதுகாப்பிற்கான முதலீடுகளை அதிகரித்துள்ள போதிலும், அதன் பலன் முழுமையாக கிடைக்கவில்லை என, 75 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
காலத்திற்கேற்ப, புதிய தொழில்நுட்பத்தில், சைபர் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், பழைய கட்டமைப்பை பின்பற்றுவதால், இந்திய நிறுவனங்கள் இடர்பாடுகளை சந்திக்கும் வாய்ப்பு, கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது. இப்பிரச்னை மிக முக்கியமானது என, 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சைபர் பாதுகாப்பு பிரச்னையில், நிறுவனங்கள் அலட்சியமாக உள்ளன என, 58 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
நிறுவனங்களின் முகத்திரையை கிழிப்பது; அறிவுசார் சொத்துரிமை தகவல்களை திருடுவது; மோசடி ஆகியவற்றுக்காக, சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறது என, முறையே, 54 சதவீதம், 51 சதவீதம் மற்றும் 48 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கணினியில் நாசகர வேலை செய்வோர், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க, நவீன தொழில்நுட்பத்தில், சைபர் பாதுகாப்பு வசதிகளை, நிறுவனங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்களால், ‘சைபர்’ தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளன. அதனால், ஒரு நிறுவனம், 100 சதவீத சைபர் பாதுகாப்பு வசதிகளை கொண்டிருப்பது சாத்தியமில்லை. தற்போதைய பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தி, சைபர் தாக்குதலில் இருந்து, உடனடியாக மீள்வதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது தான் முக்கியம்.-குல்ஷன் ராய், தேசிய சைபர் பாதுகாப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்,தேசிய பாதுகாப்பு குழு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|