பதிவு செய்த நாள்
14 ஜன2017
03:48
மும்பை:‘‘டாடா குழுமத்தின், 150 ஆண்டு கால பாரம்பரிய பெருமையை கட்டிக் காப்பேன்,’’ என, டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ள, என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ், 40க்கும் அதிகமான டாடா நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு, அக்., 24ல், டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து, சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதை அடுத்து, தற்காலிக தலைவராக, ரத்தன் டாடா பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ‘நான்கு மாதங்களுக்குள், புதிய தலைவர் நியமிக்கப்படுவார்’ என, அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக, டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, என்.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஏழு லட்சம் கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட, டாடா குழுமத்தின் வரலாற்றில் முதன்முறையாக, பார்சி அல்லாத ஒருவர், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்தவர், இந்த பொறுப்பை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, என்.சந்திரசேகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:டாடா சன்ஸ் இயக்குனராக என்னை நியமித்து, அதன் தலைவர் பதவியையும் எனக்கு வழங்கியிருப்பது பெருமையாகவும், அதே சமயம், மிகுந்த பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த டாடா சன்ஸ் இயக்குனர் குழு, தலைவர் ரத்தன் டாடா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். உயர்ந்த பண்பாடு, நன்நெறிகளை பின்பற்றி, இந்தியா மட்டு மின்றி, உலக மக்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ள, டாடா குழுமத்தின் பாரம்பரிய மாண்பை கட்டிக் காப்பேன். எவருக்கும் சுலபத்தில் கிடைத்திராத இப்பதவிக்கு, பலதரப்பட்ட தலைமை பண்புகளும், அனைவரையும் அரவணைத்து செல்லும் அணுகுமுறைகளும் தேவை. அவற்றை, வெகு விரைவில் நான் வளர்த்துக் கொள்வேன் என, நம்புகிறேன்.
அனைத்து தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு, குழுமத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.இவ்வாறு அவர் கூறினார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் பதவிக்கு, டாடா குழுமத்தைச் சேர்ந்த, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரால்ப் ஸ்பெத், யூனிலிவர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹரிஷ் மன்வானி, ஸ்மித் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் பக்லே உள்ளிட்ட ஐவரை, தேர்வுக் குழு பரிசீலித்தது. அவர்களில், டி.சி.எஸ்., தலைமை செயல் அதிகாரியான, என்.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். இவர், பிப்., 21ல், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|