பதிவு செய்த நாள்
23 ஜன2017
07:28
வருமான வரி வரம்பின் கீழ் வருபவர்கள் வரி சேமிப்பிற்கான திட்டமிடலில் கவனம் செலுத்தி, பொருத்தமான முதலீட்டு வாய்ப்புகளை நாடத் துவங்கும் மாதம் இது. வருமான வரிச்சலுகைக்கான, 80சி பிரிவின் கீழ் பயன்பெற, பி.பி.எப்., தேசிய சேமிப்பு சான்றிதழ், யூலிப்கள் உள்ளிட்ட, முதலீட்டு வாய்ப்புகள் பிரபலமாக உள்ளன. இந்த பட்டியலில் இ.எல்.எஸ்.எஸ்.,திட்டங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. வருமான வரிச்சலுகைக்காக அதிகம் பரிந்துரைக்கப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாகவும், இ.எல்.எஸ்.எஸ்., விளங்குகிறது. இக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் என்பதே, சுருக்கமாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
ஓபன், எண்ட் வகையிலான இந்த பண்ட்கள், பெரும்பாலும் சமபங்குகள் மற்றும் சமபங்குகள் சார்ந்த நிதி சாதனங்களில் முதலீடு செய்கின்றன. இவை ஒரு வகையான, மியூச்சுவல் பண்ட் திட்டமாகும். முதலீடு மற்றும் வரி சேமிப்பு என, இரண்டு வகையான பலன்களை இவை அளிக்கின்றன.
எப்படி செயல்படுகிறது?இ.எல்.எஸ்.எஸ்., திட்டங்கள் குறைந்தது, மூன்று ஆண்டு லாக் இன் காலம் கொண்டவை. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது போலவே இவற்றிலும் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டிற்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை, 80சி பிரிவில் வரிக்கழிவு உண்டு. எனவே, வருமான வரி வரம்பிற்கு ஏற்ப அதிகபட்சம், 45 ரூபாய் வரை வரி சேமிப்பு பெறலாம். இவற்றில் முதலீடு செய்ய வரம்பில்லை. அவரவர் தேவைக்கேற்ப முதலீடு செய்யலாம். குறைந்த தொகையிலும் துவங்கலாம். எஸ்.ஐ.பி., திட்டம் மூலமும் முதலீடு செய்யலாம். இந்த நிதிகள் சமபங்குகளில் முதலீடு செய்வதால் நீண்ட கால நோக்கில் நல்ல பலனை அளிக்க கூடியவை. வைப்பு நிதி, பி.பி.எப்., போன்றவற்றை விட இவை அதிக பலனை தரக்கூடியவை என, நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். லாக் இன் காலத்திலும் இவை சாதகமான அம்சம் கொண்டுள்ளன.
என்ன பலன்?வரி விதிப்பை பொறுத்தவரை இவை, அனைத்து கட்டங்களிலும் விலக்கு பெறுபவை. இவற்றின் ஈவுத்தொகை மற்றும் பலன்களுக்கும் விலக்கு உண்டு. வரி சேமிப்பு திட்டங்களில் பி.பி.எப்., மட்டுமே இந்த அம்சத்தை பெற்றுள்ளது. வரிசேமிப்பு மற்றும் முதலீட்டின் பலன் பெருகுவது ஆகிய இரட்டை பலனை இவை அளிப்பதோடு, முதலீட்டு ஒழுங்கையும் அளிக்க வல்லவையாக கருதப்படுகின்றன. இவை, மூன்று ஆண்டு லாக் இன் காலம் கொண்டிருந்தாலும், சமபங்கு முதலீட்டின் பலனை பெற, ஐந்தாண்டுகள் வரையாவது, முதலீடு செய்வது நல்லது என்கின்றனர். குறிப்பாக, இளம் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றது என கருதப்படுகிறது. பல வகையான, இ.எல்.எஸ்.எஸ்., திட்டங்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பலன்களை அலசி பொருத்தமான நிதியை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், முதலீடு செய்யும் போது, வரி சேமிப்பை மட்டும் மனதில் கொள்ளாமல், நிதி இலக்கு, மற்ற நிதி அம்சங்கள், ரிஸ்க் தன்மை உள்ளிட்டவற்றையும் பரிசீலிப்பது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|