பதிவு செய்த நாள்
27 ஜன2017
14:50
சிவகாசி: வெளிமாநில ஆர்டர் குறைவால் ஆப்சீசன் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளிகள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
சிவகாசியில் பட்டாசு தொழில் பிரதானம். நகரை சுற்றி 850 க்கு மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. ஜனவரி முதல் ஜூலை வரை ஆப்-சீசன் உற்பத்தி , அதன்பின் தீபாவளி வரை பண்டிகை கால உற்பத்தி என இரண்டு சீசனாக பட்டாசு உற்பத்தி நடைபெறும். விலையும் சீசன் உற்பத்திக்கேற்றப்படி மாறுபடும்.
கோடவுன்கள்: ஆப்-சீசனில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும். ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுவதால், இந்த சீசன் முழுக்க வடமாநிலங்களை சார்ந்தே இருக்கும். ஆனால் தீபாவளி நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் விலை உயர்வாவே இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு வெளிமாநில வியாபாரிகள் ஆப்-சீசன் நேரங்களில் அதிக ஆர்டர் கொடுத்து பட்டாசுகளை வாங்கி லைசென்ஸ் பெற்ற கோடவுன்களில் இருப்பு வைப்பர்.
நோட்டு பிரச்னை: இந்தாண்டு ஆப்-சீசன் உற்பத்தி துவக்கத்திலே மந்த கதியாக நடக்கிறது. இதற்கு வடமாநில வியாபாரிகளின் ஆர்டர் குறைவே முக்கிய காரணம். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின் பணம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதற்கு காலதாமதம் செய்கின்றனர். முன்பணம் கொடுத்து பட்டாசு செய்ய கூறுவதையும் வியாபாரிகள் தவிர்க்கின்றனர்.
ஆலைகள் மூடல்: இந்நிலை ஜன., முதல் வாரத்தில் இருந்தே நீடிக்கிறது. குளிர் கலந்த வெயில் சீதோஷ்ண நிலை பட்டாசு உற்பத்திக்கு ஏற்றது அல்ல. இதனாலும் ஆலைகளில் குறைந்த அளவிலே உற்பத்தி நடக்கிறது. இதனுடன் ஆப்-சீசன் ஆர்டரும் குறைந்திருப்பது மேலும் உற்பத்தியை குறைவடைய செய்துள்ளது. இதன் தாக்கம் பெரிய பட்டாசு ஆலைகளை விட சிறிய பட்டாசு ஆலைகளை வெகுவாக பாதிப்பதால், பெரும்பாலான சிறிய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளிகளும் வேலை இழந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|