பதிவு செய்த நாள்
30 ஜன2017
04:43
எந்த முதலீடும், நல்ல பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதோடு, பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். நிதி திட்டமிடலில் ஈடுபடும் போது, முதலீட்டிற்கு, தேக்க நிலைக்கு எதிரான பாதுகாப்பு இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். எதிர்பாராமல் ஏற்படக்கூடிய தேக்க நிலை, முதலீட்டின் பலனை பாதிக்கலாம் என்பதால், இது மிகவும் அவசியமாகிறது.
மழைக் காலத்திற்காக முன்கூட்டியே சேமிப்பது போல, தேக்க நிலை வருவதற்கு முன்பே, அதற்கான பாதுகாப்பையும் பெற்றிருக்க வேண்டும். பொருளாதார சுழற்சியில் தேக்க நிலை என்பது, எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். தேக்க நிலையில் தாக்கம் முதலீட்டையும் பதம் பார்க்கலாம். இதை தவிர்க்க முதல் வழி, அவசர கால நிதியை உருவாக்கி வைத்திருப்பது என்கின்றனர் நிதி வல்லுனர்கள். அவசர கால நிதியின் முக்கியத்துவம், தனிநபர் நிதியில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் அம்சமாக இருக்கிறது. 3 முதல் 6 மாத கால அடிப்படை செலவுகளுக்கான தொகையே, அவசர கால நிதி என குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய நிதி கைவசம் இருக்கும் போது, எதிர்பாராத நெருக்கடிகளிலும் செலவுகளை சமாளிக்கலாம் என்பதோடு, தேக்க நிலையின் போதும், இது கைகொடுக்கும்; தேக்க நிலையின் போது, வருமானம் குறையலாம். கடன் கிடைப்பதும் அரிதாகலாம். எனவே அவசர தேவை எனில், முதலீட்டின் மீதே கைவைக்க வேண்டியிருக்கும். இதனால், நீண்ட கால முதலீடு களை பாதியில் விலக்கி கொள்ள நேரிடலாம் என்பதோடு, அவற்றை குறைந்த பலனுக்கு விற்கவும் நேரலாம். அவசர கால நிதி இருந்தால், நீண்ட கால முதலீடுகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
கூடுதல் வருமானம்இதே போலவே வழக்கமான வருமானத்தை விட, கூடுதல் வருவாய்க்கான வழியை உருவாக்கி கொள்ள வேண்டும். முழு நேர வேலை, திருப்தியான வருமானம் அளிப்பதாக இருந்தாலும் கூட, உபரியாக, ஒரு வருமான வழியை உருவாக்கி கொள்வது நல்லது. இது பகுதி நேர பணியாகவோ அல்லது ஆலோசனை பணி போன்றதாகவோ இருக்கலாம். உங்கள் ஆர்வம் சார்ந்த, வருவாய் வழியாக இருந்தால் இன்னும் நல்லது. தேக்க நிலையின் போது, இந்த கூடுதல் வருமானம் பேருதவியாக இருக்கும். முதலீடுகள் பரவலானதாக இருப்பதும் மிகவும் அவசியம். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத முதலீட்டு சாதனங்களில் முதலீடு செய்திருப்பது நல்லது.
பொருளாதார சூழலில், ஒரு முதலீடு பாதிக்கப்பட்டால் கூட, இன்னொரு முதலீடு அதை சரி செய்து விடும். எனவே, பரவலான முறையில் செய்யப்பட்ட முதலீடு, தேக்க நிலையில் பாதிப்பை குறைக்கும்.வருமானத்திற்கு மீறி செலவு செய்யாமல் இருப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சேமிக்கலாம் என்பதோடு, தேக்க நிலை காலத்தில் செலவுகள் கையை கடிக்காமல் இருக்கும். கடன்கள் இருந்தால், அவற்றை அடைப்பதில், முதலில் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் முதலீடு செய்யும் போது, நீண்ட கால நோக்கத்தை மனதில் கொண்டு செயல்படவும். இந்த அணுகுமுறை, குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, தேக்க நிலை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நிதி இலக்கை நோக்கி முன்னேறவும் உதவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|