பதிவு செய்த நாள்
30 ஜன2017
04:45
வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், அதிக வட்டி விகிதம் அளிக்கக் கூடிய, சேமிப்பு கணக்குகளை துவக்குவது, பலன் அளிக்குமா என்பது பற்றி ஒரு பார்வை.
பொதுவாக, வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைவானது என்பதால், சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருப்பதைவிட, அதிக பலன் தரக்கூடிய, முதலீட்டு வாய்ப்புகளை நாட வேண்டும் என்ற கருத்து, முன் வைக்கப்படுவதுண்டு. ஆனால், தற்போது, வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள போட்டி மற்றும் புது யுக வங்கி களின் அறிமுகம் காரணமாக, சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளன. குறைந்த வட்டி விகித சூழலிலும் கூட, ஒரு சில வங்கி கள், சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி வழங்குகின்றன.
புதிதாக துவங்கப்பட்டுள்ள பேமென்ட் வங்கிகள், சிறிய வங்கிகள் மற்றும் ஒரு சில தனியார் வங்கிகள், சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி அளிக்கும் சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைந்து வருகிறது. ஒரு சில வைப்பு நிதிகளின் வட்டி விகிதம், சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை விடவும் குறைவாக உள்ளது. இந்நிலையில், அதிக வட்டி அளிக்கும் சேமிப்பு கணக்குகள் கவனத்தை ஈர்க்கின்றன. பலரும், அதிக வட்டி தரும் சேமிப்புகளை துவக்குவதற்கான துாண்டுதலை பெரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதிக வட்டி விகிதம்அண்மையில், உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி மற்றும் சூரியோதை ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவை, சிறிய வங்கிகளாக இயங்க துவங்கியுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.டில்லி, பாட்னா, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில், ஐந்து கிளைகளுடன் செயல்படத் துவங்கியுள்ள, உத்கர்ஷ் வங்கி, மற்ற வங்கிகளை விட, 1 முதல், 1.25 சதவீதம் அதிக வட்டி அளிப்பதாக தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த, சூரியோதை வங்கி, சேமிப்பு கணக்கிற்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்களுக்கு, 6.25 சதவீதம் வட்டி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை டிபாசிட்களுக்கு, 7.25 சதவீத வட்டி அளிக்கிறது.
பேமென்ட் வங்கிகள் பிரிவில் செயல்படத் துவங்கியுள்ள, ஏர்டெல் பேமென்ட் வங்கி, சேமிப்பு கணக்கிற்கு, 7.25 சதவீத டிபாசிட் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வகை வங்கியில், ஒரு லட்சம் ரூபாய் வரையே டிபாசிட் செய்ய முடியும். ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி போன்ற வழக்கமான வங்கிகள், சேமிப்பு கணக்கிற்கு ஆண்டுக்கு, 4 சதவீத வட்டி அளித்து வருகின்றன. இருப்பினும், சில தனியார் வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகள், அதிக வட்டி அளிக்கின்றன. இண்டஸ்இண்ட் வங்கி, யெஸ் பேங்க், கோடக் மஹிந்திரா பாங்க், பந்தன் வங்கி, ஆர்.பி.எல்., வங்கி ஆகியவை, 4.25 சதவீதம் முதல், 7.10 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன.
மாற்றம் தேவையா?ரிசர்வ் வங்கி, சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கிய பின், போட்டி மிக்க சூழலில், சில வங்கிகள் ஈர்க்கக்கூடிய வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பொதுவாக, கணக்கு போட்டுப் பார்த்தால், ஓராண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கு டிபாசிட்டிற்கு, 3.25 சதவீத கூடுதல் வட்டி என்பது, நாள்தோறும், 1.98 ரூபாய் வட்டி வருவாய் அளிக்கும். 4 சதவீத வட்டி எனில், இது, 1.09 ரூபாயாக இருக்கும். எனினும், சேமிப்பு கணக்கை துவக்குவதற்கு, அதிக வட்டி விகிதம் எனும் அம்சத்தை மட்டும் பரிசீலித்தால் போதாது என, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கட்டணங்கள், சேவை, அணுகும் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர். அதே போல, மினிமம் பேலன்ஸ் தொகைக்கான நிபந்தனையையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக, ஏர்டெல் வங்கியில் பணத்தை எடுக்க வேண்டுமெனில், சிறிதளவு கட்டணம் உண்டு. சூரியோதை வங்கியில், மாதாந்திர சராசரியான, 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்திருக்க வேண்டும். இந்த தொகைக்கு குறைவாக இருந்தால், அதற்கேற்ப சிறிய அளவு அபராத கட்டணமும் விதிக்கப்படலாம். எனவே, சேமிப்பு கணக்கின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, பல விதங்களிலும் பலன் தரக்கூடியதா என, சீர்துாக்கிப் பார்த்து முடிவு செய்வது ஏற்றதாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|